Politics

கண்டுகொள்ளாத பொதுமக்கள்.. ஆத்திரத்தில் திட்டிய நாம் தமிழர் கட்சி ஆதரவு இயக்குநர்- பிரச்சாரத்தில் சர்ச்சை!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியின் நிலை இப்படி இருக்க அதிமுக கூட்டணியில் போட்டியிடப்போவது யார் என்பதில் தொடங்கி வேட்பாளர் யார் என்பது வரை பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவியது. ஒருவழியாக இறுதியில் அதிமுக தரப்பு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வழக்கம்போல நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரச்சாரத்தின் போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் குறித்து அவதூறாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த தொகுதியின் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினரை தொகுதி மக்கள் விரட்டி வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமானின் உருவபொம்மை எரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலின்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், அவர் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பயணிகளுக்கு கை காட்டின நிலையில், அதற்கு பொதுமக்கள் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் களஞ்சியம், “இஞ்சி தின்ன கொரங்கு போல போது" என பொதுமக்களை நோக்கி கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: JNUவில் மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ABVP பதில் சொல்ல வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஆவேசம்!