Politics

அதானிக்கு வழங்கிய கடன் எவ்வளவு? இழப்பு என்ன? -விளக்கமளிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இரண்டு ஆண்டாக ஆய்வு செய்து இந்த குற்றச்சாட்டை நாங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிறுவனங்களில் பங்குகள் மூன்று ஆண்டுகளில் 819% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அதிகமான கடனை பெற்றுள்ளன. இந்த 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களில் விகிதங்கள் 1%க்கும் கீழே உள்ளது. இதனால் பணப்புழக்க அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.

அதானி குழுமம் பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு, பங்குச்சந்தை மோசடி என 17 பில்லியன் டாலர்கள் வரை மோடி செய்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு 1.4 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சரிவு பல நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதானி நிறுவன பங்குகளின் இந்த சரிவு காரணமாக அதில் முதலீடு செய்திருந்த LIC நிறுவனமும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அதானியின் நிறுவனங்களான அதானி டோட்டல் கேஸ், அதானி என்டர்ப்ரைசஸ் , அதானி போர்ட்ஸ் , அதானி க்ரீன் எனர்ஜி, ஏசிசி,அதானி ட்ரான்ஸ்மிஷன் போன்ற நிறுவனங்களில் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் LIC நிறுவனம் முதலீடு செய்திருந்தது.

தற்போது இந்த நிறுவன பங்குகளின் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், LIC நிறுவனத்துக்கு சுமார் 62,621 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு இன்னும் அதிகரிக்கும் என்பதால் LIC-யில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுதவிர பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் SBI போன்ற அரசு வங்கிகள் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. அதில் சில வங்கிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குறித்தும், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இன்னும் ஒரு சில நாட்களில் அதானி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கடன் கொடுத்த விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “கள ஆய்வில் முதலமைச்சர்”: அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் ஆய்வு: அதிரடி காட்ட தொடங்கிய முதலமைச்சர்!