Politics

வெளிவந்த மோசடி.. 1.4 லட்சம் கோடி இழப்பு.. உலக பணக்காரர் வரிசையில் 7-வது இடத்துக்கு சரிந்த அதானி!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இரண்டு ஆண்டாக ஆய்வு செய்து இந்த குற்றச்சாட்டை நாங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 7 நிறுவனங்களில் பங்குகள் மூன்று ஆண்டுகளில் 819% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அதிகமான கடனை பெற்றுள்ளன. இந்த 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களில் விகிதங்கள் 1%க்கும் கீழே உள்ளது. இதனால் பணப்புழக்க அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.

அதானி குழுமம் பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு, பங்குச்சந்தை மோசடி என 17 பில்லியன் டாலர்கள் வரை மோடி செய்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. அதைத் தொடர்ந்து அதானி நிறுவனம் சார்பில் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், அதானி எங்கள் 106 பக்கங்கள் கொண்ட 32,000-வார்த்தைகள் கொண்ட அறிக்கையை 720 மேற்கோள்களுடன் 2 ஆண்டுகளில் தயார் செய்து ஆராய்ச்சி செய்யப்படாதது என்று கூறியது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு "ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி" நிறுவனம் பதிலளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "நாங்கள் எங்கள் அறிக்கையை வெளியிட்டு 36 மணிநேரம் ஆகியும், நாங்கள் எழுப்பிய எந்த ஒரு முக்கியமான பிரச்சினையையும் அதானி கவனிக்கவில்லை. எங்கள் அறிக்கையின் முடிவில், 88 நேரடியான கேள்விகளை நாங்கள் கேட்டோம், அவை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க நிறுவனத்திற்கு வாய்ப்பளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கேள்விகளுக்கு அதானி இதுவரை பதிலளிக்கவில்லை. மாறாக, எதிர்பார்த்தது போலவே, அதானி கொந்தளிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை நாடியுள்ளது.

சட்ட நடவடிக்கை அச்சுறுத்தல்கள் இருந்தால் நாங்கள் அதை வரவேற்போம். நாங்கள் எங்கள் அறிக்கையுடன் முழுமையாக நிற்கிறோம், எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் தகுதியற்றதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த விவகாரத்தில் அதானி தீவிரமாக இருந்தால், நாங்கள் செயல்படும் அமெரிக்காவிலும் அவர்வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் ஆவணங்களின் நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது" என பதிலளித்துள்ளது.

இந்த நிலையில், இந்த அறிக்கை காரணமாக அதானி நிறுவனத்தின் பங்குகள் இரண்டாவது நாளாக கடும் சரிவை சந்தித்துள்ளன. காலை வர்த்தகம் தொடங்கியதும் எதிர்பார்த்தது போல அதானி நிறுவனத்தின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ஒரே நாளில் அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு 1.4 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சரிவு பல நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read: 65 ரோந்து பாயிண்டுகளில் 26-ஐ சீனாவிடம் இழந்த இந்தியா..விவாதிக்க மறுத்த மோடி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !