Politics

இலங்கைக்கு 6 ஆயிரம் கோடி கடன் கொடுத்த சீனா.. இந்தியா இலங்கைக்கு கொடுத்த கடன் உதவி எவ்வளவு தெரியுமா ?

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தினமும் 15 மணி நேரத்துக்கும் மேல் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இப்படி இலங்கை மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலைக்குக் காரணமாக உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கோரி அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர்.

மக்கள் போராட்டத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாததால் மக்கள் தொடர்ந்து போராடி கும்பலாக வந்து அதிபர் மாளிகையை கைப்பற்றினர்.

அதைத் தொடர்ந்து நாட்டில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பிச்சென்ற நிலையில் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் இடத்தில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். ஆனால் தற்போதும் அங்கே போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேநேரம் அங்கு பொருளாதார சீரமைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொருளாதரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியாக உதவி செய்து வந்தனர். இந்த நிலையில், கொழும்புவை சேர்ந்த, 'வெரிடே ரிசர்ச்' என்ற தனியார் ஆலோசனை நிறுவனம் இலங்கைக்கு உதவிய நாடுகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை இலங்கைக்கு சீனா மொத்தம் ரூ.7 ஆயிரத்து 558 கோடி கடன் வழங்கியுள்ளது. அதில், சீனா வளர்ச்சி வங்கி மட்டுமே ரூ.6 ஆயிரத்து 457 கோடி கொடுத்துள்ளது. அதே காலக்கட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி இலங்கைக்கு ரூ.2873 உதவியை அளித்துள்ளது.

அதேநேரம் கடந்த 9 மாதத்தில் மட்டும் இலங்கைக்கு இந்தியா ரூ.3 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளது.இலங்கையின் மொத்த வௌிநாட்டு கடன் தற்போது ரூ.4 லட்சத்து 7 ஆயிரத்து 82 கோடியாக உள்ளது. இதில், வரும் 2027ம் ஆண்டுக்குள் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 496 கோடியை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: 400 % உயர்ந்த கல்விக்கட்டணம்.. தீப்பந்தங்களுடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் .. உ.பி-யில் பரபரப்பு !