modi amith shah
Politics

“பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முயல்கிறார் பிரதமர் மோடி” : BJP-ன் வெற்று அறிவிப்புகளை சாடிய தீக்கதிர்!

மோடியின் அரசில் பொருளாதாரம் இந்தியாவைச் சீர்குலைவுப் பாதையை நோக்கியே அழைத்துச் செல்லும்; மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை சரியான நேரத்தில் மோடி வகையறாக்களுக்குப் புரிய வைப்பார்கள் என 24.6.2022 தேதிய ‘தீக்கதிர்’ நாளிதழ் ‘பொய் நெல் பொங்க ஆகாது’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

அது வருமாறு:-

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வகையில் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.78.33 பைசாவாக உயர்ந்திருக்கிறது. மறுபுறம் இந்தியாவைச் சேர்ந்த 8 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியிருக்கின்றனர்.

Also Read: மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி: 1,830 மடங்கு உயர்ந்த அதானியின் சொத்து - காங். குற்றச்சாட்டு!

ஆனால், நமது பிரதமரோ வழக்கம் போல் இந்தியப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருவதாகப் பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முயல்கிறார். பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.

வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய டாலராகவே பணத்தைச் செலுத்துகிறோம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால் இறக்குமதி செய்வதற்குக் கூடுதலான பணம் செலுத்த வேண்டியநிலை உருவாகிறது. அப்படிக் கூடுதல் விலை கொடுத்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது, உள்ளூரில் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்து ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது.

Also Read: மோடி ஆட்சியில் 2 பில்லியன் டாலர் இழப்பு.. இந்தியாவில் கடையை காலி செய்யும் ஃபோர்டு நிறுவனம்: என்ன காரணம்?

இந்தாண்டு 2022-23 ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் சரக்கு இறக்குமதி மதிப்பு 120.81 பில்லியன் அமெரிக்க டாலர். கடந்தாண்டு இதேகாலத்தில் சரக்கு இறக்குமதி 84.87 பில்லியன் அமெரிக்க டாலர். ஓராண்டில் மட்டும் இறக்குமதியின் அளவு 42.35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி அதிகரிக்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது மிகப்பெரிய அளவில் வர்த்தகப் பற்றாக்குறையை உருவாக்கும்.

ஆனால் அதையெல்லாம் மறைத்து விட்டு மோடி, இந்தியா வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது; இந்தாண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என முழங்குகிறார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலிருந்து 45 ஆயிரம் பெரும் நிறுவனங்களை நடத்தி வரும் கோடீஸ்வரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி நிரந்தரமாக வெளிநாடுகளில் குடியேறியிருக்கின்றனர் என்கிறது ஹென்லி குளோபல் சிட்டிசன்ஸ் ஆய்வறிக்கை.

Also Read: "இந்தியாவிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேற்றம்" - மோடி அரசால் பின்வாங்கிய முதலீட்டாளர்கள்!

“மேக் இன் இண்டியா” எனும் திட்டத்தின் கீழ் 2014 முதல் 2021 நவம்பர் வரை இந்தியாவில் பதிவு செய்து செயல்பட்ட 2,783 அந்நிய நிறுவனங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூடுவிழா நடத்திச் சென்றுவிட்டன. பொருளாதாரம் வேகமாக வளர்ந்தால் ஏன் இந்த நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்?

இதே காலத்தில்தான் விவசாயம் சாராத கிராமப்புற ஊதியம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 21 சதவிகிதம் சரிவைச் சந்தித்திருக்கிறது. விவசாய இடுபொருட்கள் விலை 11 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கிராமப் புறச்சந்தை விற்பனை 5.8 சதவீதம் சரிவடைந்திருக்கிறது. இதுதான் மோடி கூறும் புதிய இந்தியாவின் வளர்ச்சி. மோடியின் அரசில் பொருளாதாரம் இந்தியாவைச் சீர்குலைவு பாதையை நோக்கியே அழைத்துச் செல்லும். மக்கள் எப்போதும் ஏமாளிகள் அல்ல என்பதை சரியான நேரத்தில் மோடி வகையறாக்களுக்குப் புரிய வைப்பார்கள்.

Also Read: “தலைகள் மாறினாலும், நிலைமைகள் மாறவில்லை.. ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்த இலங்கை அரசு” : முரசொலி தலையங்கம்!