Politics

காமெடியன் to பஞ்சாப் முதலமைச்சர் - யார் இந்த பகவந்த் சிங் மன்?

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மனி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் தற்போது 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் முதல் மாநிலமாகியுள்ளது பஞ்சாப்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 93 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது; அகாலிதளம் 5 இடத்தில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஆம் ஆத்மி சார்பாக பகவத் சிங் மன் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ள நிலையில் பகவந்த் சிங் மன் அம்மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

பகவந்த் சிங் மன் ஸ்டான்ட் அப் காமெடியனாக மிகவும் புகழ்பெற்றவர். மேடைகளில் ஸ்டான்ட் அப் காமெடி செய்தவர் 1990களில் காமெடி நிகழ்ச்சிகளை CD கேசட்களில் பதிவு செய்து விற்றார். இவரின் காமெடிகள் வேகமாகப் பரவி மக்களின் வரவேற்பைப் பெற்றார்.

பஞ்சாப்பில் ஜாட் சிங் குடும்பத்தில் வசதியான பின்னணியோடு பிறந்த பகவந்த் சிங் மன்னுக்கு லட்சக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. இவரது அப்பாவின் அரசியல் ஆர்வம் காரணமாகவே இவருக்கும் அரசியல் குறித்து ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மீது அதிக விமர்சனங்கள் கொண்ட இவர், காங்கிரஸை தாக்கி அதிகளவில் ஸ்டான்ட் ஆப் காமெடி செய்துள்ளார். 2011ல் அரசியல் ஆர்வத்தால் பீப்பிள் பார்ட்டி ஆப் பஞ்சாப்பில் செயல்பட்டு வந்தார். 2012ல் சட்டசபை தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர், ஆம் ஆத்மி தொடங்கப்பட்டதும் பிபிபி கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் பகவந்த் சிங் மன். 2014 மக்களவைத் தேர்தலில் பஞ்சாப்பில் சங்ரூர் தொகுதியில் வென்றார்.

டெல்லியில் கூட ஆம் ஆத்மி மக்களவைத் தொகுதியை வெல்ல முடியாத நிலையில் இவர் பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு வெற்றியை ஈட்டித் தந்தார். 2019ல் மீண்டும் அதே தொகுதியில் வென்று எம்.பி ஆனார்.

இந்நிலையில், நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பகவந்த் சிங் மன் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது தேர்தல் முடிவுகளின்படி, பகவந்த் சிங் மன் போட்டியிட்ட துரி தொகுதியில் அவர் பெரிய வாக்கு வித்தியாசத்துடன் முன்னிலையில் உள்ளார். பஞ்சாபில் ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அம்மாநில முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

Also Read: சித்து- சன்னி- அமரீந்தர் சிங் : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 பேரும் தோல்வி - என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?