Politics

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: மகாத்மா காந்தி மீது பழிபோட்டு எஸ்.வி.சேகர் பல்டி-ஜாமீனுக்கு போலிஸ் மறுப்பு!

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துணி போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றுகிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலேயே தேசியக் கொடியில் காவி மற்றும் பச்சை நிறம் இடம்பெற்றுள்ளதாக காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே தான் தெரிவித்ததாக எஸ்.வி.சேகர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த காவல்துறை தரப்பு, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதற்கு முன்னர் காந்தியடிகள் இந்தக் கருத்தை தெரிவித்ததாகவும், அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர், தேசிய கொடியின் வண்ணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் எஸ்.வி.சேகர் தற்போது கருத்து தெரிவித்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தேசியக் கொடியை அவமதித்ததால் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்ப்பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த காவல்துறை, இன்று காலை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி.சேகர் ஆஜராகியுள்ளதாகவும், இன்று நடத்தப்பட்ட விசாரணை நிறைவடையாததால் அவர் மீண்டும் வரும் 28 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின்போது எஸ்.வி.சேகர் கொடுக்கும் விளக்கத்தை பொறுத்தே அவரை கைது செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் எனவும், இடையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Also Read: தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு : முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!