Politics

வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு : விசாரணை அறிக்கையை அரசுக்கு அனுப்பியது ஏன்? - ஐகோர்ட் காட்டம்!

சென்னை, கோவை மாநகாரட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் இந்த விசாரணையை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுத்துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால் விசாரணையை கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை முடித்து வைக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் சாட்சியாக இருந்த ஒப்பந்ததாரர் சந்திரபோஸை வீட்டை காலி செய்யச் சொல்லி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் அமைச்சரின் முகவர்களாகச் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து, சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்ற அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை கைவிடுவதற்கான ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மார்ச் 13ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Also Read: “டெண்டர் முறைகேடு வழக்கை திசைதிருப்பவே என் மீது அவதூறு வழக்கு” - உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!