Politics

வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை... எம்.பி-ஆவதில் சிக்கலா?

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தேச துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பதாகவும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க சார்பில் ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் இடத்திற்கு ம.தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வைகோ. இந்தத் தேர்தல் வரும் ஜூலை 18-ல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்றைய தீர்ப்பால் மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிடுவதில் சிக்கல் எழும் என்று கருதப்பட்ட நிலையில், ஓராண்டு மட்டுமே தண்டனை என்பதால் அவர் மாநிலங்களவை எம்.பி ஆவதில் சிக்கல் இல்லை என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தல் நிற்க தடை இருக்கிறது என்பதாலும், அவர் இன்றைக்கே மேல்முறையீட்டுக்குச் செல்லவோ, ஜாமின் பெறவோ வாய்ப்பு இருப்பதாலும் அவர் மாநிலங்களவை உறுப்பினராவதில் சிக்கல் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்குப் பிறகு அபராதத்தை செலுத்திய வைகோ, மேல்முறையீட்டுக்குச் செல்ல இருப்பதால், தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் அவசர மனு அளித்துள்ளார்.