Politics

எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டியது அவசியம் : குடியரசுத் தலைவர் உரை

17-வது மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியது. முதல் இருநாட்கள் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு எம்.பி-களாக மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து பா.ஜ.க சார்பில் மக்களவைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வானார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார். அவர் கூறியதாவது :-

"மக்களவைக்கு தேர்வாகியுள்ள புதிய உறுப்பினர்களை நான் மனதார வரவேற்கிறேன். மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம் பெற்றிருப்பது பெருமையானது. இந்த மக்களவைத் தேர்தலில், 61 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்தனர். இந்திய மக்கள் தெளிவான முடிவை வழங்கி உள்ளனர். தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாம் தண்ணீரை பாதுகாக்க வேண்டும். அதற்காக தான் ஜலசக்தி துறை உருவாக்கப்பட்டுள்ளது. ஜலசக்தி துறை அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு பெரும் கவலையாக மாறியுள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளை மீட்டெடுக்க சிறப்பு திட்டங்கள் தீட்டப்படும் " எனக் கூறினார்.

குடிநீர் பிரச்னை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் கருத்து, நிதி ஆயோக் அறிக்கை வெளியான நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த அறிக்கையில், இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உட்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் நிலத்தடி நீர் இருக்காது. முற்றிலும் வற்றிவிடும் என்றும் இந்த சூழலினால் 10 கோடி மக்கள் பாதிப்படைவார்கள் என்றும், தற்போதிருக்கும் நிலை நீடித்தால் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீத மக்களுக்கு குடிநீர் கிடைக்காது நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.