murasoli thalayangam
“அதிகரிக்கும் தவெக நிர்வாகிகளின் ‘க்ரைம் ரேட்’.. பகுதி பகுதியாய் பட்டியலிடும் முரசொலி தலையங்கம்!”
தமிழ்நாட்டில் அராஜகம் செய்யும் தவெக-வினர்!
தமிழ்நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா, சட்டம் இருக்கிறதா, போலீஸ் இருக்கிறதா, காவல் நிலையங்கள் இருக்கிறதா என்று கேட்கக் கூடிய அளவுக்கு அராஜகங்கள் அரங்கேறி வருகின்றன.ஆளும் கட்சியாக வந்து விட்டோம், த.வெ.க.வினர் எத்தகைய அராஜகமும் செய்யலாம் என்று அக்கட்சியினர் நினைத்துக் கொண்டு விட்டார்கள். குற்றங்கள் அதிகமாகி விட்டன என்பதை விட, த.வெ.க.வினர் செய்யும் குற்றங்கள்தான் அதிகமாகி விட்டன என்றே சொல்ல வேண்டும்.
‘கில்லி' சரத் என்று முன்பு அழைக்கப்பட்டவர், மாண்புமிகு சரத்குமாராக இப்போது இருக்கிறார். அவர் இழுப்பதற்கு முன் ‘பவுடர்’ தயாரித்த வீடியோக்கள் வெளியான பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் தயாராக இல்லை. தனது ரசிகை ஒருவரை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் தூண்டுதலின் பேரில் இரண்டு த.வெ.க. நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்தது ஆதாரப்பூர்வமாக அம்பலமான பிறகும் அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் தயாராக இல்லை. இதுதான் சட்டம் ஒழுங்கை அவர் காக்கும் லட்சணம் ஆகும். அதனால்தான் த.வெ.க. நிர்வாகிகளின் ‘க்ரைம் ரேட்' அதிகமாகி வருகிறது.
1. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே த.வெ.க.வைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் த.வெ.க. தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட த.வெ.க. நிர்வாகி ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக அந்தப் பெண் சொல்கிறார். அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களிடம் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார் அந்தப் பெண். தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது என்றும் சொல்கிறார் அந்தப் பெண்.
2. சென்னை காசிமேட்டில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆர்.கே. நகர் 43-ஆவது வார்டு த.வெ.க. பகுதி பொறுப்பாளர் 'பாம்பு' தினேஷ் ‘போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
3. தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த த.வெ.க. நிர்வாகி தியாகு (32) கைது செய்யப்பட்டுள்ளார்.
4. மதுரை கீழமாத்தூர் பகுதியில் பெயிண்டர் வேலை பார்த்து வரும் த.வெ.க. நிர்வாகி கண்ணன் 10-ஆம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று பாலியல் தொல்லை கொடுத்தபோது கையும் களவுமாக சிக்கினார். கைது செய்யப்பட்ட அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
5. முதலீட்டாளர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார் 25 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாகப் புதுக்கோட்டை மத்திய மாவட்ட த.வெ.க. செயற்குழு உறுப்பினர் சரவணன் கைதானார்.
6. கும்பகோணம் நாலுரோடு பகுதியில் சாலையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட த.வெ.க. பேனரை அகற்றக் கூறிய போக்குவரத்து காவலரைத் தாக்கி, அவரது கையை முறித்த த.வெ.க. தொண்டர்கள் அருண், காளி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
7. ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாலப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், த.வெ.க. கிளைச் செயலாளர். இவரால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளித்துள்ளனர். த.வெ.க. நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
8. நாமக்கல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் எம்.எல்.ஏ. திலீப் ஆய்வு செய்தபோது, உடன் சென்ற த.வெ.க. மாவட்டச் செயலாளர் சதீஸ், அங்கிருந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளரை ஒருமையில் பேசியதுடன், ‘டிரான்ஸ்பர் செய்து விடுவேன்' என மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
9. பெருங்களத்தூரில், ஆப்ரேட்டர் துரை என்பவர், கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். த.வெ.க. கொடி அணிந்த வாகனத்தில் வந்த த.வெ.க. வட்டச்செயலாளர் ஜெய், ஒரு லட்சம் ரூபாய் கேட்டு அடாவடி செய்தார். தனது ஆதரவாளரிடம், 'கத்தியை எடு' என கூறிய த.வெ.க. நிர்வாகி ஜெய், ‘பொக்லைன்’ ஆப்பரேட்டரை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்.
10. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கீழாமூர் கிராமத்தில் வசித்து வந்த முத்தம்மாளிடம் நகையை பறித்து கொலை செய்ததாக த.வெ.க. கிளை நிர்வாகி வாசுதேவனை போலீசார் கைது செய்தனர்.
11. வேலூர் மாவட்டம், கணியம்பாடியைச் சேர்ந்த த.வெ.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தங்கள் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்குச் சென்று ஒரு லட்சம் மாமூல் கேட்டு மிரட்டினார். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்தவர்கள் மீதே வேலூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு தான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வேறு வழியில்லாமல் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
12. சென்னை அரும்பாக்கத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை த.வெ.க.வைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் பல வருடங்களாக ஆக்கிரமித்து உணவகம் நடத்தி வந்திருக்கிறார். அதை அகற்றச் சொன்ன மாநகராட்சி அதிகாரிகளையும், கட்டுமான நிறுவன ஊழியரையும் தாக்கி இருக்கிறார் குணசேகரன். அவர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- தொடரும்
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!