murasoli thalayangam

“சி.பி.ஆரின் இலங்கைப் பயணம் என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகமே!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் போது, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் அவர்கள் இலங்கையில் இருந்தார்கள். ‘பார்த்தீர்களா? நாங்கள் இலங்கைத் தமிழர்க்கு நன்மை செய்கிறோம்’ என்று காட்டுவதற்கான பா.ஜ.க.வின் இலங்கை நாடகம்தான் இது.

துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் இலங்கை செல்கிறார் என்றதும், கச்சத்தீவை மீட்கப் போகிறாரோ? இலங்கைத் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டப் போகிறாரோ? தினமும் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மீனவர்களைக் காக்கப் போகிறாரோ? – என்பது போன்ற ஆர்வம் ஏற்பட்டது. இதெல்லாம் இல்லை என்பதை சி.பி.ஆரின் பயணம் உணர்த்தி விட்டது.

சி.பி.ராதாகிருஷ்ணன் இலங்கை செல்வதற்கு முன்னதாக ‘தினமணி’ நாளிதழ் ( 19.4.2026) ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது. ‘இருதரப்பு உறவின் புதிய அத்தியாயம்’ என்று அதற்கு தலைப்பு போட்டுள்ளது.

‘’இலங்கைத் தமிழர்கள் கோரி வரும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துதல், இலங்கை மாகாணத் தேர்தல்களை நடத்துதல் ஆகிய பிரச்சினைகளை இலங்கைத் தலைவர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் எடுத்துரைக்கத் திட்டமிட்டு இருப்பதாக அறிய முடிகிறது’’ என்கிறது அந்தக் கட்டுரை.

இலங்கைத் தமிழர்கள் கோரி வரும் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துங்கள் என்று சி.பி.ஆர்.அவர்கள், அங்கு இலங்கை குடியரசுத் தலைவ ரிடமோ, பிரதமரிடமோ கோரிக்கை வைத்தாரா என்றால் இல்லை.

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகாவை, சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஏப்ரல் 20ஆம் தேதி சந்தித்துள்ளார். அது குறித்து ‘தினமணி’ வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கைத் தமிழர்கள் கோரி வரும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

இந்தியாவின் சார்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டங்கள் பற்றித்தான் அவர்கள் பேசி இருக்கிறார்கள். பல்வேறு உதவிகளை இலங்கைக்கு இந்தியா செய்யப் போகிறது. அதைப் பற்றித்தான் இவர்கள் பேசி இருக்கிறார்கள்.

‘மீனவர் பிரச்சினை பற்றியும் பேசினார்கள்’ என்று அந்த செய்திக் குறிப்பு சொல்கிறதே தவிர, என்ன பேசினார்கள் என்பது இல்லை. ‘இனியொரு இந்திய மீனவர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படக் கூடாது’ என்று சி.பி.ஆர்.அவர்கள் சொன்னதாக தகவல் இல்லை.

இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூர்யாவை, சி.பி.ஆர். அவர்கள் சந்தித்துள்ளார்கள். அவரிடமாவது இலங்கைத் தமிழர்கள் கோரி வரும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றிப் பேசினாரா என்றால் இல்லை. கலாச்சார, பாரம்பரிய உறவின் முக்கியத்துவத்தைத்தான் இருவரும் பகிர்ந்து கொண்டதாக செய்திக்குறிப்பு சொல்கிறது.

2024 ஏப்ரல் மாதத்தில் கச்சத்தீவை மீட்பது பற்றி பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் என்னவெல்லாம் பேசினார்கள். ‘காங்கிரஸ் ஆட்சிதான் கச்சத்தீவை தாரை வார்த்தது’ என்று குற்றம் சாட்டினார்களே. அந்தக் கச்சத்தீவை பா.ஜ.க. மீட்டுத் தருமா? மீட்க வேண்டாம். ஒரு கோரிக்கையாவது இலங்கை அரசாங்கத்திடம் வைப்பதற்கு இவர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா? துணிச்சல் வேண்டாம். அக்கறையாவது உண்டா?

‘’கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றனர். அவர்கள் மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு கடல் தாவரங்களையும் கடுமை யாகச் சேதப்படுத்துகின்றனர்.

சர்வதேச சட்டங்களின்படி நிறுவப்பட்ட கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். இந்தியாவில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அரசியல் காரணங்களுக்காகவே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புகின்றன” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜிதா ஹெராத். இது பற்றி சி.பி.ஆருக்கு யாராவது நினைவூட்டினார்களா?

பிரதமர் மோடி இலங்கை சென்ற போதும் அதைப் பற்றிப் பேசவில்லை. இப்போது சி.பி.ஆரும் இது பற்றிப் பேசவில்லை. மறந்துவிட்டார்களா?

இந்திய மற்றும் நடுக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும் வருகிறார்கள். அவர்கள் படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. உடைக்கப்படுகின்றன. மீன் பிடி வலைகள் அறுக்கப்படுகிறது. பல நேரங்களில் உயிர்க் கொலைகள் நடத்தப்படு கிறது.

லட்சக்கணக்கில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பல மாதங்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதனைத் தடுப்பதற்கு இந்திய அரசாங்கம் என்ன செய்தது? இலங்கை சென்ற இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டாமா? அதுவும் ‘தமிழர்’ பேசி இருக்க வேண்டாமா?

குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்றும், அந்த நாட்டைச் சேர்ந்த இசுலாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்றும் சொன்னார்கள். பாகிஸ்தானில் இருந்து, வங்க தேசத்தில் இருந்து, ஆப்கானிஸ்தானத்தில் இருந்து இசுலாமியர் நீங்கலான மற்ற மதத்தவர்கள் வரலாம் என்றால் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் வரலாமா? என்றால் வரக்கூடாது என்பதைத் தடை செய்த சட்டம் அது.

அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்றால் இலங்கையைச் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்ய வில்லை. மற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் வரலாம் என்றால் இலங்கையில் இருக்கும் தமிழர்களை இந்துக்களாக பா.ஜ.க. அரசு அங்கீகரிக்கவில்லை. இப்படி இலங்கைத் தமிழர்க ளுக்கு துரோகம் இழைத்ததுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆகும்.

எனவேதான், சி.பி.ஆரின் இலங்கைப் பயணம் என்பது தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் போது பா.ஜ.க. நடத்தும் ஒரு அரசியல் நாடகமாகவே அமைந்துள்ளது.

Also Read: தங்க வளையலை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை: சென்னை எழும்பூர் நிலையத்தில் நெகிழ்ச்சி!