murasoli thalayangam

தேர்தல் 2026 : களமிறங்கும் 234 பேர்... வெல்லும் வேட்பாளர்கள் மூலமாக இலக்கை வெல்வோம்! - முரசொலி!

நடக்க இருக்கும் 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் வேட்பாளர்கள் மட்டுமல்ல, இவர்கள்தான் நாளைய சட்டமன்ற உறுப்பினர்கள். வெல்லும் வேட்பாளர்கள் ஆவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியானது, உருவான காலம் முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும், அனைத்து வகைப்பட்ட தேர்தல்களிலும் வெற்றியையே பெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் இக்கூட்டணி தொடர்கிறது. இக்கூட்டணிக்குள் புதிய இயக்கங்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்திய நாட்டுக்கு இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ளது. அந்த இரண்டு தேர்தல்களிலும் இக்கூட்டணி 100 விழுக்காட்டு வெற்றியை தமிழ்நாட்டில் பெற்றுக் கொடுத்தது. அனைத்து இடைத்தேர்தல்களிலும் வென்றது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் வென்றது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. வரும் ஏப்ரல் 23 ஆம் நாள் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் வென்று ஆட்சி அமைக்கப் போகிறது கழகம். இத்தகைய தொடர் வெற்றிப் பயணமாக திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பயணம் அமைந்துள்ளது.

இதற்கு மிக முக்கியக் காரணம், தோழமை உணர்வு ஆகும். ‘இது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி’ என்று சொல்லி வருவார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அதேபோல், ‘எண்ணிக்கையால் ஆனது அல்ல, எண்ணங்களால் ஆனது’ என்றும் சொல்வார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். கூட்டணிக் கட்சிகளோடு பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது உண்மைதான். இதுதான் ஜனநாயக மாண்பு ஆகும். பேசிப் பேசித்தான் தீர்வுகளை எட்ட முடியும். பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் தோழமை உணர்வும் பலப்படும். அந்த வகையில் தோழமைக் கட்சிகளோடு ஜனநாயக முறைப்படி பேச்சுவார்தைகளை நடத்தியது கழகம்.

அந்த அடிப்படையில் 234 தொகுதிகளும் பங்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதனை கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள்.

234 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். 70 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் – 164, காங்கிரஸ் கட்சி – 28, தேசிய முற்போக்கு திராவிட கழகம் – 10, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 5, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் – 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 2, மனிதநேய மக்கள் கட்சி – 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2, மனிதநேய ஜனநாயக கட்சி – 1, முக்குலத்தோர் புலிப்படை – 1, எஸ்.டி.பி.ஐ. – 1, தமிழர் தேசம் கட்சி – 1 தொகுதிஎன ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுளது.

தோழமைக்கு ஒதுக்கிய தொகுதிகளில் 11 இடங்களில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது. 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் அதனதன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட 164 வேட்பாளர்களின் தகுதிப் பட்டியலையும் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.164 பேரில் பட்டம் பெற்றவர்கள் 125 பேர். இதில் பெண்கள் 18 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். பல்கலைக் கழக ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்றவர்கள் 7 பேர். மருத்துவர்கள் 15 பேர். பொறியியல் பட்டதாரிகள் 17 பேர். சட்டம் படித்தவர்கள் 29 பேர்.

இவை அனைத்துக்கும் மேலாக 60–க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். இளைஞர்கள், பெண்கள் அதிலும் புதுமுகங்களை அதிகம் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார் கழகத் தலைவர் அவர்கள்.

‘234 தொகுதிகளுக்கும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர், உதயசூரியன்தான் சின்னம் என்ற உணர்வோடு தேர்தல் பணியாற்ற வேண்டும்’என்று தலைவர் அவர்கள் அடிக்கடி சொல்வார். அத்தகைய உணர்வோடு களம் காணத் தயாராகி விட்டார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சோப லட்சம் தொண்டர்கள்.

“ஏழாவது முறை மட்டுமல்ல எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டை ஆள முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். நான் முதலமைச்சர் ஆவதற்கோ – 30 பேர் அமைச்சர் ஆவதற்கோ –200 பேர் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கோ – இதனை நான் சொல்லவில்லை. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்நாட்டைக் காக்க தகுதியும் திறமையும் உழைப்பும் உள்ள ஒரே படை நமது கருப்பு சிவப்புப் படைதான். தமிழைக் காத்தவர்கள் நாம். தமிழனைக் காத்தவர்கள் நாம்.

தமிழ்நாட்டைக் காத்தவர்கள் நாம். காக்கும் கடமை கொண்டவர்கள் நாம். காவல் அரண் நாம். நம்மை நம்பித்தான் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்காகத்தான் நாம் இருக்கிறோம். அதற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொய்வில்லாமல் தொடர வேண்டும். அதுதான் முக்கியம்”என்று கழகத் தலைவர் அவர்கள் திருச்சி மாநில மாநாட்டில் குறிப்பிட்டார்கள். இதுவே இலக்கு. இதுவே வெல்லும் இலக்கு ஆகும்.

வெல்லும் வேட்பாளர்கள் மூலமாக இலக்கை வெல்வோம்!

Also Read: ”பா.ஜ.க.வுக்கு கூஜா தூக்கும் அ.தி.மு.க.. திருநர்களின் குரலை ஒடுக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி விமர்சனம்!