murasoli thalayangam
”பா.ஜ.க.வுக்கு கூஜா தூக்கும் அ.தி.மு.க.. திருநர்களின் குரலை ஒடுக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி விமர்சனம்!
திருநங்கையர் உரிமை காக்கப்பட வேண்டும்!
முரசொலி தலையங்கம் (28.03.2026)
எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், எதை எல்லாம் செய்யக் கூடாதோ அதைச் செய்து கொண்டு இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. நாடே சிலிண்டர் தட்டுப்பாட்டால் இருக்கிறது. அதைப் பற்றிய கவலையோ, அதைச் சரி செய்வதற்கான முயற்சியோ கவலையோ பிரதமர் மோடிக்கு இல்லை. 'கொரோனா காலத்துக்குத் தயார் ஆகுங்கள்' என்று சொல்லிவிட்டு கைகழுவத் தயாராகி வருகிறார். இன்னொரு பக்கத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார். அதில் ஒன்றுதான் 'திருநங்கையர் திருத்த மசோதா' ஆகும்.
”திருநங்கையர் திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும். திருநங்கையர் திருத்த மசோதா விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். திருநங்கையர் திருத்த சட்ட மசோதாவை நிறுத்தி வைத்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். 'திருநங்கைகள் சட்டம், 2019-'இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, வலுக்கட்டாயமாகச் செயல்படுத்தக் கூடாது. திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட இருக்கும் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது.
ஒன்றிய அரசின் திருத்தத்தை திருநங்கையர்கள் எதிர்க்கும்போது அந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திணிக்கக் கூடாது” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள். அந்தளவுக்கு மோசமான சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது.
இந்த மசோதாவை ஆதரித்து பாதம் தாங்கி பழனிசாமி கட்சியைச் சேர்ந்த தம்பிதுரை பேசி இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு கூஜா தூக்குவதில் மட்டுமல்ல; மக்களுக்குத் துரோகம் செய்வதிலும் முந்தி நிற்பது அ.தி.மு.க.தான்.
யாருடைய எதிர்ப்பைப் பற்றியும் பா.ஜ.க.வுக்கு கவலை இல்லை. அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமல்ல; சமூக அக்கறையுள்ள அனைவருமே எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். 'திருநங்கைகள் திருத்த மசோதா 2026'-க்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய திருநங்கைகள் மன்றத்தின் உறுப்பினர்களான தெற்கு மண்டலப் பிரதிநிதி கல்கி சுப்பிரமணியமும், வடக்கு மண்டலப் பிரதிநிதி ரிதுபர்ணா நியோக்கும் தங்கள் பதவியை விட்டு விலகி இருக்கிறார்கள்.
இந்தத் திருத்த மசோதா, திருநங்கைகள் தங்கள் பாலினத்தை தாங்களே சுயமாக அடையாளம் காணும் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மசோதாவை இறுதி செய்வதற்கு முன்பு சமூகப் பிரதிநிதிகளிடமோ அல்லது தங்கள் மன்றத்திடமோ உரிய ஆலோசனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘இந்தச் சட்டத் திருத்தம் திருநங்கைகளின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும் அடிப்படை உரிமைகளில் இது ஒரு 'பின்னோக்கிய அடி' என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திருநங்கைகள் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு, ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், 'திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026'-ஐத் திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் அதே நாளில்தான் மக்களவையில் இந்த சர்ச்சைக்குரிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.
·Trans Amendment Bill 2026' என்பது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரை சட்டத்தால் தரப்பட்ட உரிமையை இம்மசோதா பறிப்பதாக திருநர், திருநங்கைகள் குற்றம் சாட்டுகிறார்கள். 2019 ஆம் ஆண்டைய சட்டத்தின் படி ஒருவர் மூன்றாம் பாலினத்தவராக இருந்தால், தாங்களாகவே மூன்றாம் பாலினத்தவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தச் சட்டத் திருத்தத்தில் இந்த உரிமை நீக்கப்படுகிறது. இனி, அரசு மூன்றாவது பாலினத்தைச் சரிபார்த்து உறுதிப்படுத்தி, அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே சம்பந்தப்பட்ட நபரை மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்தவராக எடுத்துக்கொள்ள முடியும். "திருநங்கைகள் அவர்களது தன்மையை மருத்துவக் கவுன்சில் முன்பும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பும் நிரூபிக்க வேண்டும்" என்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.
2019 சட்டத்தில் இருந்த "self-identification" முறையை நீக்கி, 'மருத்துவக் குழு சான்றிதழ் அவசியம்' என மாற்றியிருப்பது மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது ஆகும்.
2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய நல்சா (NALSA) தீர்ப்பின் அடிப்படையில் திருநங்கைகள் எப்படி இருக்க வேண்டும், அவர்களுக்கு எத்தகைய சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று அழகாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 2019ல் ஒன்றிய அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றியது. அதிலும் சில முன்னோக்கிய மாறுதல்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த சூழலில், இன்னும் பின்னோக்கிப் போக வைத்துள்ளது பா.ஜ.க.வின் மசோதா.
”எங்களைக் குறிப்பிட அரவாணி, யூனக் என்ற வார்த்தைகளை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ‘யூனக்' என்ற சொல்லின் பொருள் 'விதையடிக்கப்பட்ட ஆண்' என்பதாகும். ஆகையால் அந்தச் சொல்லையும் இந்த திருத்தச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும். வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்படும் எங்களைப் பாதுகாக்கும் வேலைகளைச் செய்வோருக்கு தண்டனை வழங்கும் விதமாக சட்டங்கள் உள்ளன. அவற்றையும் நீக்க வேண்டும்" என்று திருநங்கையர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, வயது தளர்வு மற்றும் மதிப்பெண் தளர்வு, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளுக்கான அணுகல் எளிமையாக்கல், வீட்டு வசதித் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து, தரமான மற்றும் அணுகக்கூடிய சுகாதாரச் சேவைகள், ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அவர்களது எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றாமல், அவர்களது அடையாளத்தை நிரூபிப்பதுதான் முக்கியமானது என்ற சிக்கலை உருவாக்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு.
திருநங்கையர், நம்பிகள், மூன்றாம் பாலினத்தவர் (இன்னும் பல்வேறு பெயர்களில்...) என்று அழைக்கப்படுபவர்களின் உரிமைகளைக் காக்க வேண்டும். குரலற்ற அவர்களின் குரல்வளையை நெரிக்கும் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறுத்த வேண்டும்! நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்!
Also Read
-
CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி… RCB அணியுடன் தோனி விளையாட மாட்டார்.. என்ன காரணம்? - முழு விவரம் உள்ளே!
-
இன்று முதல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா.. 10 அணிகள், 70 லீக் போட்டிகள்… யாருக்கு கோப்பை? - முழு விவரம்!
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!