murasoli thalayangam

“இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் தமிழினம் : காலநிலை மாற்றமும் - பசுமைத் தமிழ்நாடும்” - முரசொலி பாராட்டு!

கால நிலை மாற்றமும் - பசுமைத் தமிழ்நாடும்

‘காலநிலை மாற்றம்தான் உலகின் முன் உள்ள மிக முக்கியமான சவால்’ என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் பிறந்த நாள்விழாவின் போது முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இதன் தொடர்ச்சியாக ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ என்ற பெரும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். இது உலகளாவிய ஒரு கருப்பொருள் குறித்து அக்கறை கொண்ட மாநில அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும்.

வெப்ப உயர்வு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை ஐ.நா. காலநிலை மாற்றத்துக்கான குழு (ஐ.பி.சி.சி.) கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி விடுத்து இருந்தது. 67 நாடுகளைச் சேர்ந்த 270-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்குகொண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் பல்வேறு அபாய அறிவிப்புகள் இருந்தது.

* நவீன நுகர்வு வாழ்க்கை முறைகளால் இயற்கையைவிட அதிகமான வெப்பம் ஏற்படுகிறது. அப்படி உருவாகும் அளவுக்கு அதிகமான வெப்பம் பூமியிலிருந்து வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. இதை வெளியேற்றுவதற்கான வழியை விரைவில் ஏற்பாடு செய்யாவிட்டால் பூமியில் வாழும் உயிர்களின் வாழ்க்கைத் தரமும், நிலையான எதிர்காலமும் பாதிக்கப்படும்.

* பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் தாக்கத்தைக் குறைந்தபட்சமாகக் கணக்கிட்டாலும், 2100- ஆம் ஆண்டு உலக வெப்பநிலை 1.5 டிகிரிக்குக் குறைவாகவே உயரும் என்றே எடுத்துக்கொண்டாலும், 2100- ஆம் ஆண்டு இன்றைய விவசாய நிலங்களில் 8 சதவிகிதம் விவசாயத்துக்கு ஏற்றதாக இருக்காது. மக்கள் தொகை பெருகும். ஆனால், விவசாயப் பரப்பு குறையும். வெள்ளம் மற்றும் கடல்மட்டம் உயரும்.

* புவி வெப்பம் இருக்க வேண்டியதைவிட 2 டிகிரி அதிகமானால், நிலத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் 18 சதவிகிதம் வரை அழிந்துபோகும் அபாயம் அதிகம். 2 டிகிரி அல்லது அதற்கும் குறைவாக வெப்பநிலை அதிகமானாலும்கூட, துருவ விலங்கினங்கள் (மீன்கள், பெங்குவின்கள், சீல் விலங்குகள் மற்றும் துருவக் கரடிகள் உட்பட), வெப்பமண்டல பவளப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

* உலக மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள். வெப்ப அலைகள் (Heat wave) போன்ற தீவிர வானிலையை நகரங்கள் அதிகம் சந்திக்கும். காற்று மாசுபாடு அதிகரிக்கும். போக்குவரத்து, நீர், சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்படும்.

* இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆசிய நாடுகளில் வறட்சி நிலை 5 முதல் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும்- இவ்வாறெல்லாம் அதில் கூறப்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

‘‘பசுமைத் தமிழ்நாடு இயக்கம் இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும். இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், இயற்கையை நாம் நினைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். அந்த அடிப்படையில் நம்மிடம் இருக்கும் இயற்கை வளத்தைக் காப்பாற்றுவதற்காக ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ தொடங்கப்பட்டுள்ளது. நம்முடைய இலக்கியங்கள் இயற்கையைப் பற்றியே அதிகமாக எழுதி இருக்கின்றன.

இயற்கையைப் பற்றியே நம்முடைய புலவர்கள் அதிகமாகப் பாடி இருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் தமிழினம். வளர்ச்சி என்பதன் பேரால் இயற்கைக்கு சோதனை வரும் போதெல்லாம் இயற்கையையும் காத்து வளர்ச்சியை வழிநடத்தி வருகிறோம். அதுதான் தமிழ்நாடு அரசின் பசுமைக் கொள்கை ஆகும்” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

‘‘இயற்கையையும், - பசுமையையும் அரசும், ஆட்சியும் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. மக்களும் சேர்ந்தால்தான் காப்பாற்ற முடியும். ஏனென்றால் இயற்கை என்பது அரசின் சொத்து மட்டுமல்ல; - மக்களின் சொத்தும் ஆகும். எதிர்கால சமுதாயத்தின் சொத்தும் ஆகும்” என்றும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

“தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவில் 23.8 சதவிகிதம் காடுகள் ஆகும். இதனை 33 சதவிகிதமாக மாற்ற நினைக்கிறது தமிழ்நாடு அரசு. இதற்கான பத்தாண்டுத் திட்டம்தான் இந்த பசுமை இயக்கம் ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆண்டு மட்டும் 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதமே தொடங்கப்பட்டு விட்டன. எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்த மரங்கள் வளருமோ அந்தந்த மரங்களை வளர்ப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 32 கோடி மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் நடப்பட இருக்கின்றன.

பாரீஸ் உடன்படிக்கையின் படி இந்தியாவின் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பில், அதாவது 2.5 பில்லியனிலிருந்து 3 பில்லியன் கார்பன்டை ஆக்ஸைடுக்கு நிகரான கூடுதல் கார்பன் உட்கொள்ள நமது மாநில பங்களிப்பாக 25 முதல் 30 மில்லியன் டெரா கார்பன்டை ஆக்ஸைடுக்கு நிகரான கூடுதல் கார்பன் உட்கொள்ளுதலை அளிக்க முடியும்” என்று தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 5-வது பெருநகரமாக உள்ளது சென்னை. கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையிலும் காலநிலைக்கான செயல்திட்டத்தை தயாரிக்கும் C40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் சென்னை மாநகராட்சி இணைந்துள்ளது.

C40 நகரங்களுக்கான கூட்டமைப்பின் சார்பில் சென்னையின் காலநிலை செயல் திட்டத்தை தயாரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு செயல்திட்ட பரிந்துரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் காலநிலை மாற்றப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு எந்தளவுக்கு உன்னிப்பாகச் செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். ஐ.நா.வின் அக்கறையே ‘திராவிட மாடல்’ அரசின் அக்கறையாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

Also Read: “வன்முறையாளர்களை ஒடுக்குவதில் அரசு தயக்கம் காட்டாது” - மதவாத சக்திகளுக்கு முரசொலி பதிலடி !