M K Stalin

“தமிழ்நாடு வாக்களித்துவிட்டது; மே 4 தமிழ்நாடு வெல்லும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

தமிழ்நாடு வரலாற்றில் முக்கியத் தேர்தலாக, 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நேற்று (ஏப்.23) நடந்து முடிந்துள்ளது.

காலை 7 மணிக்கே தொடங்கிய தேர்தல் வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி வருகை தந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, 8 மணி வரை அவர்கள் வாக்களிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றாலும், அமைதியான முறையில் மக்களின் பங்களிப்பு இருந்தது.

குறிப்பாக, இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுக்க 84.69 விழுக்காடு வாக்குகள் பதிவானது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!

எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.

84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.

“ஒரு வாக்குதானே” என எண்ணாமல், “ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது” என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்!

Also Read: “தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்கிறார் சந்திரபாபு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!