M K Stalin
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 39 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “தமிழ்நாடு ஹஜ் இல்லம்” கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
=> இஸ்லாமியப் பெருமக்கள் நல்வாழ்விற்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் :
இஸ்லாமியப் பெருமக்கள் வேலைவாய்ப்பு பெற்று வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 சதவீதம் தனி இடஓதுக்கீடு வழங்க சட்டம் இயற்றி இடஓதுக்கீடு வழங்கினார். மேலும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்ததோடு, இஸ்லாமிய பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்படும் திராவிட மாடல் அரசு, இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் ஆதரவற்ற, விதவைகள் மற்றும் வயதான முஸ்லிம் பெண்களுக்கு நிதி உதவி வழங்குதல், பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பிற்காக மானியம் வழங்கும் திட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குதல், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு ஆண்டு நிர்வாக மானியம் 2.50 கோடி ரூபாய் வழங்குதல், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன்கள் வழங்குதல், உலமாக்களுக்கு மாதம் ரூ.1,200/- ஓய்வூதியம், உலமா ஓய்வூதியதாரர் இறந்தபிறகு, அவரின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், தொன்மையான 6 தர்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.5 கோடி நிதி, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியம் ரூ.80 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு தலா ரூ.1,000/- கல்வி உதவித்தொகை, தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- மானியம் வழங்குதல், மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்குதல், இஸ்லாமியர் அடக்கம் செய்யும் இடமான கபர்ஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச் சுவர் மற்றும் பாதை அமைக்க நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
=> தமிழ்நாடு ஹஜ் இல்லம் :
அந்த வகையில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக – சென்னை விமான நிலையம் அருகில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் 3.3.2025 அன்று நடைபெற்ற நாகப்பட்டினம் மாவட்ட அரசு விழாவில் அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் விமானம் புறப்படுவதற்கு ஒருநாள் முன்னர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகத்தை அணுகி பயண நடைமுறைகளை நிறைவேற்றி விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 39 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லம் அடித்தளம் உட்பட நான்கு தளங்களுடன் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், தரைத் தளத்தில் ஹஜ் அலுவலகம், வரவேற்பறை, கூட்ட அறை, ஹஜ் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறை, முதல் தளத்திலிருந்து நான்காவது தளம் வரை சுமார் 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் மொத்தம் 100 படுக்கை அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளன.
இவ்விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் இ. கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா, ஜெ. முகம்மது ஷா நவாஸ், அப்துல் வகாப், கே.எஸ். மஸ்தான், வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மற்றும் செயல் அலுவலர் / முதன்மைச் செயலாளர் மு.அ. சித்திக், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசுச் செயலாளர் எ.சரவணவேல்ராஜ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சினேகா, இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் ஜோ. அருண், துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், சென்னை மாவட்ட காஜி உஸ்மான் மொகிதீன் உள்ளிட்ட மாவட்ட காஜிக்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர்கள், கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர் சுபேர்கான், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!