M K Stalin

“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இந்தியாவின் மக்களாட்சி முறையை மழுங்கடிக்கும் மதவாத நடவடிக்கைகளையும், பிளவுவாத நடவடிக்கைகளையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் முறையை சட்டப்படி செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனை குளறுபடிகளையும் செய்ய துணிந்து வருகிறது பா.ஜ.க.

அதற்கு ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் துணைபோவது மட்டுமல்லாமல், நடுநிலைத்தன்மையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமும் துணைபோவது மக்களாட்சி மீது கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு வலுவூட்டும் வகையில் பீகார், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து அரியானாவிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது என்பதை சான்றுகளுடன் வெளிக்காட்டியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தவை பின்வருமாறு,

“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!

அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள 'பச்சையான ஆதாரங்கள்' அதிர்ச்சியூட்டுகின்றன.

வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.

இதன் அடுத்தகட்டம்தான் S.I.R என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும், இன்று வெளியாகியுள்ள HaryanaFiles-உமே சான்று!

இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா?”

Also Read: பீகார் : 121 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல் - பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள்!