M K Stalin
“அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம்; மக்களின் உயிர் விலைமதிப்பற்றது”: பேரவையில் முதலமைச்சர் பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கி வரும்வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று கேள்வி நேரம் முடிந்தபிறகு கரூர் துயரச் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கடந்த 27-9-2025 அன்று கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது. நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியது.இறந்து போனவர்க்கு ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். உறவுகளை இழந்தவர்கள் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
25.09.2025 காலை லைட்ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு காரணமாக அனுமதி வழங்கவில்லை. பிறகு 26.09.2025 அன்று அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினார். அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல் துறையின் சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
* இதில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,
* 5 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்,
*18 ஆய்வாளர்கள்,
*75 உதவி ஆய்வாளர்கள்
* ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 513காவலர்கள் கரூர் மாவட்டத்திலிருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
காவல்துறையைப் பொறுத்தவரை, வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது.
பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10 ஆயிரம் பேர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.'
கூட்டம் நடத்த அனுமதி கோரிக் கொடுத்த கடிதத்தில் மாலை 3 முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
ஆனால் செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சித் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் செயலாளர் தெரிவித்து இருந்தார்.
இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கினர்.
27.09.2025 அன்று, அக்கட்சியின்தலைவர் சென்னையிலிருந்து காலை 08.40 மணிக்கு புறப்பட்டு, 09.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார்.
அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அதாவது 7 மணி நேர தாமதமாகவந்தடைந்தார். இந்தத் தாமதம், கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இங்கே அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்... கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கியமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை.
காலை முதல் காத்திருந்த மக்களுக்கு குடிநீர் தரப்படவில்லை. குடிநீர் கிடைக்கவில்லை. உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்க எந்தவிதமான ஏற்பாடுகளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.
சம்பவம் நடந்த அதே வேலுசாமிபுரத்தில் இதற்கு இரு தினங்களுக்கு முன்பாக அதாவது 25.9.2025 அன்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சி நடந்துள்ளது.
கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாகனம் திருக்காம்புலியூர் ரவுண்டானாவை அடைந்து கோயம்புத்தூர் சாலையை நோக்கி வலது பக்கத்தில் தவறான பாதையில் சென்றது.
அப்போது காவல் துறையின் அறிவிப்பை மீறி கேரவன் வாகனம் முனியப்பன் கோவில் அருகில் தவறான திசையில் வலதுபுறம் கடந்தது. அந்த வாகனத்தைத் தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும், கட்சியினரும் கேரவன் வாகனத்தை பின்தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரச்சார வாகனத்தின் பின்னால் ஏராளமான பொதுமக்கள் வந்ததாலும் கரூர்நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் பிரச்சார வாகனத்தில் இருந்தஏற்பாட்டாளர்களை அக்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தினர்.
அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த பதிலும் அளிக்காமல், தொடர்ந்துமுன்னேறிச் சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ட்சியின் இணைச் செயலாளர் பலமுறை தொடர்பு கொண்டுபிரச்சார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும் அவர் தவெக கட்சியின் தலைவர் தனது உரையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த வழிமுறைகளை மீறி, வாகனம் அக்ஷயா மருத்துவமனையிலிருந்து 30-35 மீட்டர் தூரம் சென்ற போது இருபுறமும் இருந்த கூட்டத்தினரை இது நிலைகுலைய செய்தது. இதனால், கூட்டத்தில் பலஇடங்களில் அலைமோதச் செய்தது. கூட்டத்தில் இருந்த பெண்கள் மற்றும்குழந்தைகள் மத்தியில் , மூச்சுத் திணறல், மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டனர்.
கூட்டத்தின் ஒருபகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து, தகரக் கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சிசெய்தனர். இதனால் மின்சாரம் தாக்குவதைத் தடுக்க, ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்திருக்கிறார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும் சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து காவல் துறையினர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்தனர்.
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த உடனேயே, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், முதன்மைச் செயலர், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் உள்ளிட்டோர் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், அன்று இரவே நானும் கரூருக்குச்சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். இதைக் கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை.
அதனால் தான் உடனடியாக கரூருக்கு அன்றைய இரவே சென்றேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் பார்வையிட்டு, மருத்துவர்களுடன் ஆலோசித்து உத்தரவுகள் பிறப்பித்தேன். அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினார்கள்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் இரவு 7.47 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் வந்து பணியில் ஈடுபட்டனர். பொது சுகாதார இயக்குநர் தலைமையில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
கரூர் மருத்துவமனையில் 700 படுக்கைகள் இருந்தாலும், கூடுதல் 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. 24 மணி நேர அவசர சிகிச்சை, சிடி ஸ்கேன், ஆய்வகங்கள் செயல்பட்டன. பணிகளை விரைவுபடுத்திட திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அம்மாவட்ட மருத்துவக் குழுவினர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து “Help Desk” அமைத்து, இறந்தவர்களின் உடல்களை காவல் துறை உதவியோடு அடையாளம் கண்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அலுவலர்களின் உதவியோடு உடற்கூறு செய்வதற்கு ஏற்பாடு செய்தனர்.
கரூருக்கு அருகாமையில் உள்ள சேலம், நாமக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தங்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்களுடன் 27.09.2025 அன்று இரவு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
இது தவிர, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயமுத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக வல்லுநர்கள், பிரேத பரிசோதனை உதவியாளர்கள் என மொத்தம் 152 நபர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
இச்சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41. இதில் ஆண்கள் 13 பேர். பெண்கள் 18 பேர். குழந்தைகள் 10 பேர். கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில், இறந்த அனைத்து உடல்களையும், குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால், அன்றைய இரவில் உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அனுமதியின்படி, உயிரிழந்தவர்களை பிரேதப் பரிசோதனை செய்திட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் மரு.சங்கர் அவர்களின் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைகள் / உடற்கூராய்வு செய்யப்பட்டது. 28.09.2025 அன்று அதிகாலை 1.45 மணிக்கு முதல் உடற்கூராய்வு துவங்கப்பட்டு 28.09.2025 அன்று மதியம் 1.10 மணியளவில் 39-வது உடற்கூராய்வு முடிவுற்றது.
காவல் துறை உயர் அதிகாரிகளின் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் 27.09.2025 அன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குழுமிய பெரும் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தி எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். துயரமான இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
தீவிர காயமடைந்த 47 நபர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும், வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்ற 55 நபர்களுக்கு தலா 50,000 ரூபாயும் என மொத்தம் 143 நபர்களுக்கு 4.84 கோடி ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை விசாரிக்க, 28.09.2025 அன்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்தச் சம்பவத்தை சட்டப்படி, விரைந்து கையாண்டது. அனுமதி வழங்கல், மருத்துவ உதவி, நிவாரண விநியோகம் அனைத்தும் சரியான நடைமுறையில் நடந்தன. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழி காட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நான் எனது ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள் தான்.
மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும்.
கட்டுப்பாடுகளை மீறும் போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள் தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவிய போது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக நான் கேட்டுக் கொண்டேன். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் கட்சித் தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறக்கிறதை விரும்ப மாட்டாங்க என்று பெருந்தன்மையுடன் நான் அப்போது குறிப்பிட்டேன்.
இறந்தவர்கள் நமது உறவுகள் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் காத்தது நமது அரசு. அனைவருக்கும் சிகிச்சை அளித்தது அரசு. அதே நேரத்தில் இது போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!