M K Stalin

“பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால்..” - பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு முதலமைச்சர் வரவேற்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இளம்பெண்களை அடித்து துன்புறுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.

இதனால் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட பல கட்சிகளும், மாதர் சங்கங்களும் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தது. இதனால் வேறு வழியின்றி இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

அப்போது இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சியை சேர்ந்த சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரண்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அருளானந்தம், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்துள்ளார்.

இதனால் அப்போதைய அதிமுக அரசு அந்த 9 பேரையும் காப்பாற்ற முனைப்புக் காட்டியது. எனினும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு, இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, இவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் பலரும் வரவேற்பு அளித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வரவேற்த்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

“பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்.”

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் த்ண்டனை பெற்ற குற்றவாளிகளின் விவரம் :

A1 சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை,

A2 திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை,

A3 சதீஸ்க்கு 3 ஆயுள் தண்டனை,

A4 வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை,

A5 மணிவண்னுக்கு 5 ஆயுள் தண்டனை,

A6 பாபுவுக்கு 1 ஆயுள் தண்டனை,

A7 ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனை,

A8 அருளானந்தத்திற்கு 1 ஆயுள் தண்டனை,

A9 அருண்குமாருக்கு 1 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Also Read: ”இந்தியாவிற்கே வழிகாட்டி வரும் திராவிட மாடல் அரசின் திட்டங்கள்” : தமிழ்நாடு அரசு பெருமிதம்!