M K Stalin

“வெள்ளத்தில் வந்த கரடியை பிடித்த அந்த ஒரு ஆள்..” : குட்டி ஸ்டோரி மூலம் அதிமுக-பாஜகவை விமர்சித்த முதல்வர்!

3 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்திற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டில் முதல் சிலையினை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர், முதலமைச்சாரக பொறுப்பேற்று மூன்றாவது முறையாக ஜூன் 12 அன்று டெல்டா பாசன விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைக்கிறார். இதனிடையே இன்று திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் பாஜகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் அதற்கு எடுத்துக்காட்டாக குட்டி ஸ்டோரி ஒன்றையும் கூறினார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அப்போது அந்த பொருட்களெல்லாம் ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது.

கரையில் நின்று கொண்டிருந்த மக்கள், இந்த பொருட்கள் நமக்கு அகப்படாதா என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கருப்பாக பெருசா ஒன்னு உருண்டு வந்தது. அதை எடுப்பதற்கு பலருக்கும் போட்டி போட்டார்கள்.. ஆனால் அதனை ஒரு ஆள் கைப்பற்றி விட்டார்! கைப்பற்றிய பிறகுதான் தெரிந்தது உருண்டு வந்தது கரடி என்று.

இப்போது அந்த ஆள் கரடியை விட தயாராகிவிட்டார். ஆனால், அந்த கரடி அந்த ஆளை விட தயாராக இல்லை. அந்த ஆளும் கரடியும் போன்றதுதான் அதிமுகவும் - பாஜகவும். மக்கள் வெள்ளத்தில் இவர்கள் இருவருமே அடித்து செல்லப்படுவார்கள் என்பது தான் உறுதி" என்று பேசினார். பாஜக கூட்டணியை முறித்துக் கொள்ள அதிமுக தயாராகிவிட்ட போதிலும், பாஜக விட மறுத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும் நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Also Read: புகாரளித்த வீராங்கனையை பிரிஜ் பூஷன் வீட்டுக்கு அழைத்து சென்ற டெல்லி போலிஸ்.. நெட்டிசன்கள் கண்டனம்!