M K Stalin

"#DravidianModel பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் !

காஞ்சிபுரத்தில் உள்ள ஒலி முகமது பேட்டையில் நெசவுக்குடும்பத்தில் பிறந்தவர் பேரறிஞர் அண்ணா. குடும்ப ஏழ்மைக் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சிறிது காலம் பணியாற்றி பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ., என இரண்டு பட்டங்களை பெற்று ஆங்கிலத்தில் புலமையடைந்தார்.

கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியராக பணியை தொடங்கிய பேரறிஞர் அண்ணாவை, தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள் கவர்ந்தன. தந்தை பெரியாருடன் இணைந்தார். ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழுக்காக சிறை சென்றார் பேரறிஞர் அண்ணா.

பின்னாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து, 1962 ஆம் ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, நாடாளுமன்றத்தில் தென்னகத்தின் உரிமையை நிலைநாட்ட எழுச்சியுரைகளை ஆற்றினார். பின்னர் 1965 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கடும் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டது.

தமிழர் நலனே குறிக்கோளாக கொண்ட தி.மு.கழகத்தினர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டு தமிழ்நாட்டோர் கொதித்தனர். மேலும், இந்தி திணிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை தமிழ்நாட்டு மக்களைப் பாதித்தது.

இதன் விளைவு 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக ஆனார்கள்.

6-3-1967-ல், இந்தியப் பொதுத்தேர்தல் ஜனநாயக வரலாற்றில், முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த அரிய சாதனையைப் படைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகவும், தலைவர் கலைஞர் உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், தமிழில் பதவியேற்பு நிகழ்வினை நடத்தி, உளமார உறுதிமொழி கூறிப் பொறுப்பேற்றார்.

அவர் உருவாக்கிய வழித்தடத்தை பின்பற்றி அறிஞர் அண்ணாவுக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் தமிழ்நாட்டை பல உயரத்துக்கு எடுத்துச்சென்றார். கலைஞருக்கு பின்னர் அண்ணாவின் கொள்கை பிடிப்போடு வளர்ந்த தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவை ஆட்சி கட்டிலில் அமரவைத்து தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக முன்னேற்றியுள்ளார்.

இந்த நிலையில், இந்த பெருமைமிகு நாளை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாம் செல்லுகின்ற #DravidianModel பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று!"ஏ தாழ்ந்த தமிழகமே!" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்! " எனக் கூறியுள்ளார்.

Also Read: வட மாநிலத்தவர் தாக்குதல் : வதந்திக்கு பின்னால் இருக்கும் பாஜகவின் சதியை புட்டுபுட்டு வைக்கும் முரசொலி !