M K Stalin

எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க பாய்ந்து குட்கா விற்பனையை ஒழிப்பதில் பதுங்கிய அரசு - மு.க.ஸ்டாலின்

"குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது முதலமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல்; தமிழகத்திற்கும் தலைகுனிவு ஆகும்" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

“திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சட்டமன்ற ஜனநாயகத்தை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்சினைகளையும் சட்டமன்றத்தில் எழுப்பும் உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்றத் தவறி விட்டாலும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அந்த உரிமையை சட்டப்பூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

File image : MK Stalin

கேன்சரை உருவாக்கும் குட்கா விற்பனையைத் தாராளமாக அனுமதித்து அதில் பங்கேற்ற அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழலை நாட்டு மக்களுக்குத் தெரிவித்திடவே குட்கா பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றதை மறைத்து, நீதி வழுவிய முறையில் பேரவைத் தலைவர் மூலமாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய சதிச் செயலில் இறங்கியது அ.தி.மு.க. அரசு. அதை இந்தத் தீர்ப்பு தகர்த்தெறிந்து இருக்கிறது. சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனதார வரவேற்று மகிழ்கிறேன்!

இந்த வழக்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாதாடி - சிறப்பான இந்தத் தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்த கழகத்தின் மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் மற்றும் என்.ஆர்.இளங்கோ எம்.பி., ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது தமிழக முதலமைச்சர் பழனிசாமி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல்; தமிழகத்திற்கும் தலைகுனிவு ஆகும்.

Also Read: மு.க.ஸ்டாலின் உட்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து : சென்னை ஐகோர்ட் அதிரடி!

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் தாராளமாக விற்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியின் மீது உரிமை மீறல் விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குப் பாய்ந்த அரசு, குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் பதுங்கி விட்டது. அதனால் குட்கா எனும் சமூகத் தீமையின் போக்குவரத்தும் விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது.