M K Stalin
'குட்கா ஊழல், லஞ்சம்,கொள்ளை இதிலெல்லாம் எடப்பாடி அரசுக்கு விருது கொடுக்கலாம்' : மு.க ஸ்டாலின் அதிரடி !
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் அவரும் அவரது ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தி.மு.கழகத்தில் இணையும் நிகழ்வு மதுரை ஒத்தக்கடை அருகே யானை மலை பகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிப்ரவரி 23ம் தேதி(இன்று) நடைபெற்றது.
இந்த விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகள் பலர் கலந்துகொண்டனர். கழகத்தில் இணையும் நிகழ்வின் போது தமிழக மக்களுக்கான நலத்திட்ட உதவிகளுக்காக ராஜகண்ணப்பனின் அறக்கட்டளை சார்பில் கழக அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கழகத் தொண்டர்கள் முன்னிலையில் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.
அதில், ”சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், நீதிகேட்ட கண்ணகி வாழ்ந்த இந்த மண்ணில் தி.மு.கழகத்தில் இணையும் விழா நடக்கிறது. இது இணைப்பு விழாவா அல்லது இணைப்பு விழா மாநாடா அல்லது 2021ல் கழகத்துக்கு கிடைக்கவிருக்கும் வெற்றிக்கான வெற்றிவிழா நிகழ்வா என ஆச்சர்யத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், எழுச்சியோடும், உணர்ச்சியோடும், ஆர்வத்தோடும், ஆரவாரத்தோடும் தி.மு.கவில் இணையும் விழா நடைபெறுகிறது” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ”நமக்கெல்லாம் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும் வகையில் கழக இணைப்பு விழாவை வெற்றிவிழாவாக நடத்தியிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், எந்நாளும் செயல்வீரர்!” என அவரை புகழ்பாடி அவருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.
”ஒடுக்கப்பட்டோருக்கான இன்னல்களை தீர்ப்பதற்காகவும், அவர்களது துன்பங்களை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட கழகம் தி.மு.க. என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆட்சியில் இருந்தபோது ஒடுக்கப்பட்டோருக்கு என சிறப்பான திட்டங்களை, சட்டங்களை இயற்றியது தி.மு.க. அதேவேளையில் ஆட்சியில் இல்லாத போது அவர்களின் உரிமைக்காக போராடுகிற, வாதாடுகிற இயக்கம் தி.மு.க. பேரறிஞர் பெருந்தகை அண்ணா இது சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.”
”அதுபோல, 50 ஆண்டுகாலம் தி.மு.க.,வை தலைமை தாங்கி வழிநடத்திய தலைவர் கலைஞர் , சீமான் வீட்டு பிள்ளை இல்லை, சாமானியர் வீட்டு பிள்ளை. மிகமிக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து பிறந்தவர் என்று பெருமையாக கூறியவர் தலைவர் கலைஞர். அத்தகைய சாமானியர்களுக்கான இயக்கம்தான் இச்சமூகத்திற்கு யாரும் செய்திராத பல சாதனைகளை செய்து காட்டியிருக்கிறது” என மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
”திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா, இதனை கட்சியாக கருதாமல் இயக்கமாக கருதினார். ஏனெனில், இது மக்களுக்காக இயங்கிக்கொண்டே இருக்கும் என்பதாலேயே இயக்கமென குறிப்பிட்டார். ஆகையால், எழுத்துரிமை, பேச்சுரிமையை காப்பதற்காக இரு முன்னணி படை அமைத்தாகவேண்டும் என அண்ணா கூறியதற்கேற்றார்போல், இன்று கழகத்தில் இணைந்துள்ள ராஜகண்ணப்பன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோரையும் கேட்டுக்கொள்கிறேன்.”
”ஏனெனில் மிக முக்கியமான காலகட்டத்தில் தி.மு.கவில் இணைந்திருக்கிறீர்கள். தமிழகத்தில் நடக்கும் எடப்பாடியின் ஆட்சியையும், அதன் கூட்டத்தையும் வேரோடு அழிக்கும் வேலை உங்களுக்கு காத்திருக்கிறது. அரசின் பெயரில் கடன் வாங்குவதும், அதே பணத்தை வைத்து கொள்ளையடிப்பது என இரண்டே வேலையையே எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறது. இதுதான் தமிழகத்தில் உள்ள அரசின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
மோசமாகும் நிதிநிலை !
இதனையடுத்து, நடப்பாண்டின் தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிதிநிலை கவலைக்கிடமான நிலையில் கோமாவில் இருக்கிறது. இதற்கு சாட்சியாக எடப்பாடி அரசே தமிழகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகாலமாக 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் வெறும் 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்து 4.56 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என்றால் எடப்பாடி அரசின் சாதனை என்னவென்பது உணர்ந்துகொள்ளலாம்.
கடன் வாங்கி, கொள்ளையடிப்பதையே திண்ணமாக கொண்டுள்ள எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, மக்கள் நலப்பணிகளை செய்தபாடில்லை என குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.
என்ன ஆனது பேனர் விவகாரம் ?
தொடர்ந்து, ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடுவதாக அறிவித்துள்ள எடப்பாடி அரசுக்கு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசும் அ.தி.மு.க அரசுக்கு அருகதை உள்ளதா என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க பேனர் விழுந்ததில் இளம் பெண் சுபஸ்ரீ துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த நிகழ்வை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அப்பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு நிதியுதவியும் வழங்கினேன். ஆனால் இதற்கு காரணமாக இருந்த ஆளுங்கட்சியோ எந்த நிதியுதவி கூட செய்யாமல் இருக்கிறது. இப்படி இருக்கையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளை கொண்டாடும் என்ன தகுதி அ.தி.மு.க அரசுக்கு இருக்கிறது என கடுமையாக சாடியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா? இப்படிபட்ட ஆட்சியில் இருப்பவர்கள்தான் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளை கொண்டாடும் லட்சணமாக உள்ளது. இதற்கு ஜெயலலிதா பெயர் வைத்து பூசி மொழுகி வருகிறார்கள்.
சரியாக இன்னும் பனிரெண்டே மாதங்கள்தான், அதன் பிறகு 2021ல் தேர்தல் வரும். தேர்தலுக்கு பின் நாம் ஆட்சி. ஆட்சிக்கு வந்த பிறகு பொறுத்திருந்து பாருங்கள் என ஊழல், லஞ்ச லாவண்யம், மோசடி செய்யும் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தை சாடி மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விவசாயி வேடம் போடும் எடப்பாடி !
தேர்தல் நெருங்கி வருவதால் புதிய அவதாரங்களை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதில் ஒன்றுதான் விவசாயி அவதாரம். நானும் விவசாயிதான் என சொல்லிக் கொண்டிருக்கிறார். விவசாயி எனச் சொல்லிக்கொண்டால் அவர்களது நகத்தில் மண் இருக்கும். ஆனால் எடப்பாடியின் கரத்தில் ஊழலின் கறைகள் தான் இருக்கிறது.
மேட்டூர் அணை திறக்காததால், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், எட்டு வழிச்சாலையால், ஹைட்ரோகார்பன் திட்டத்தால், விலைவாசி உயர்வால் முற்றிலும் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் விவசாயிகள். இவ்வளவு பாதிப்பும் தன்னை விவசாயி என மார்தட்டி சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் நடந்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டவர் எப்படி தன்னை விவசாயி எனச் சொல்லிக்கொள்ளும் எடப்பாடி வெட்கப்பட வேண்டாமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அண்மைக் காலங்களாக, எடப்பாடியின் 3 ஆண்டு சாதனை என பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அது அனைத்தும், மத்திய மோடி அரசால் உணர்வுப் பூர்வமாக கொடுக்கப்பட்டது அல்ல. அவர்கள் காலால் இட்ட கட்டளையை இவர்கள் தலையால் செய்து முடிக்கிறார்கள். அதனால் அந்த விருது எடப்பாடி அரசு வாங்கியதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
வந்த முதலீடுகள் எங்கே ?
மக்களின் வரிப்பணத்தை அரசு விளம்பரம் தந்துள்ள எடப்பாடி அரசு குறிப்பிட்டிருக்கிறது 3 லட்சம் கோடிக்கு முதலீடு இந்த மூன்று ஆண்டுகளில் ஈர்த்துள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால், அந்த 3 லட்சம் கோடி நிறுவனங்களின் பெயர் பட்டியலை தமிழக முதல்வராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி வெளியிடத் தயாரா? இது குறித்து சட்டமன்றத்திலும் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு விருது கொடுக்கவேண்டுமானால், குட்கா ஊழல், லஞ்சம், துப்பாக்கிச் சூடு, கொள்ளை போன்றவற்றுக்கு அவர்களின் பினாமிகள் கொடுக்கலாம். ஆகவே தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி ஊழலுக்கான ஆட்சியாகவே உள்ளது.
காவிரி டெல்டாவும், ஊழல் அரசும்
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இதற்காக மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கப்பட்டதா? அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான முறையான அனுமதியை பெற்றிருக்கிறீர்களா? ஏற்கெனவே உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மூடப்படுமா? என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், கழக உறுப்பினர்களும் கேள்வி எழுப்பினோம்.
Also Read: “யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடக ஒத்திகை?” - ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
இதற்கெல்லாம் சட்ட முன்வரைவில் பதிலளித்துள்ள எடப்பாடி அரசு ஏற்கெனவே உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் அது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும்? இது முற்றிலும் முட்டாள்தனமாக அறிவிப்பாகவும், மத்திய மாநில அரசு சேர்ந்து போடுகிற கபட நாடகமாகவும் உள்ளது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு தமிழக மக்களுக்கு பச்சை துரோகத்தை இழைத்து வருகிறார். அவரது பச்சை துரோகம் வெகு விரைவில் வெளிச்சத்துக்கு வரும்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Also Read
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!