M K Stalin
“கேரள மக்களின் துயரில் பங்கெடுப்போம்” : நிவாரணப் பொருட்களை அனுப்பிடுமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
கனமழை - பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவிட அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்திடுமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநில மக்கள் மீண்டும் கனமழையிலும் - பெரு வெள்ளத்திலும் சிக்கி பேரிடருக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று வரும் செய்திகள் இதயத்தை கனக்க வைக்கிறது. அங்கு நிகழ்ந்த நிலச் சரிவுகளில் இதுவரை 83 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதும், 60 பேர் வரை காணாமல் போய் இருக்கிறார்கள் என்பதும் தாங்கிக் கொள்ள முடியாத துயரச் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
மழை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளான மக்கள் சுமார் 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். வீடுகளை இழந்து, உறவினர்களை பறிகொடுத்து கேரள மாநிலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் செய்தி நட்புறவுடன் கேரள மக்களுடன் பழகி வரும் நம் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த வேதனையைத் தருவதாக அமைந்துள்ளது.
கேரளா அரசு நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருக்கின்ற போதிலும் அண்டை மாநில மக்கள் என்கிற முறையில் நாமும் இந்த பேரிடரால் ஏற்பட்ட துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அம்மாநில மக்களுக்கு உதவிட வேண்டும்.
எனவே, கழக நிர்வாகிகளும் - தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வேண்டிய பல்வேறு நிவாரண பொருட்களை தி.மு.க. தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!