M K Stalin
“சமூக நீதியைக் காக்க அரசுக்கு ஆதரவாக தி.மு.க எப்போதும் நிற்கும்” : மு.க.ஸ்டாலின் உரை!
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சமூக நீதியைக் காப்பாற்ற முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பேசியதாவது, சமூக நீதிக் கொள்கைக்கு கிஞ்சிற்றும் சேதாரமில்லாமலும், நீர்த்துப் போகாமலும், காப்பாற்றுவதற்காக நாமெல்லாம் இன்று இங்கே கூடியிருக்கிறோம்.
சமூக நீதியின் ஊற்றுகண்ணாக - இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக, முன்னோடியாக விளங்குகிறது தமிழகம்.
தமிழகத்தில் மட்டுமல்ல - இந்திய அளவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் "சமூக நீதி" மட்டுமே அடிப்படை அம்சம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களோ, தலைவர் கலைஞர் அவர்களோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களோ, - ஏன் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களோ, இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை.
7.6.1971-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக முதல்வர் கலைஞர் அவர்களால் உயர்த்தப்பட்டது. அதே அரசு ஆணையில், பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு, 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இப்படி பல்வேறு காலகட்டங்களில் உயர்த்தப்பட்டு, இன்றைக்கு 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் சட்ட ரீதியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 69% இடஒதுக்கீடு, தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், கடந்த 30 ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு அவசர அவசரமாக 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கிய உரிமை பறிக்கப்பட தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. மருத்துவப் படிப்பில் 25% தருகிறோம் என்பதை நம்பி 10% இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
சமூக நீதியைக் காக்க, பிரதான எதிர்கட்சியான தி.மு.க அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் உணர்வு பூர்வமாக எல்லா வழியிலும் ஒத்துழைக்கும். நம் முன்னோர் நமக்கு வழங்கி இருக்கக்கூடிய இட ஒதுக்கீடு உரிமை விட்டு தரக்கூடாது.” என வலியுறுத்தினார்.
Also Read
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!