India

“எங்க ஸ்டேட்டு இனி ‘கேரளம்’ ஆனோ...” - மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை - விவரம்!

கேரளா மாநிலம், 1956-ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்டதுதான் கேரளா. இந்த சூழலில் கேரளா மாநிலத்தின் பெயரை மலையாள மொழியின் அடிப்படையில், 'கேரளம்' என்று மாற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு திட்டமிட்டது.

அதனடிப்படையில் கடந்த 2023-ம் ஆண்டு அரசியலமைப்பின் 3வது பிரிவின்கீழ் இதை ‘கேரளம்’ என்று திருத்தம் செய்து பெயர் மாற்றம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த தீர்மானத்தில் சில குறைகள் இருப்பதாக கூறி ஒன்றிய அரசு அதனை திருப்பி அனுப்பியது.

இதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்மாநில அரசு, பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில், இன்று (பிப்.2, 2026) நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 'கேரளா' என்பதை 'கேரளம்' என பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்ற குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அரசியல் சாசன பிரிவின் 3வது பிரிவின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இன்று நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் கேரளா எனும் பெயரை கேரளம் என மாற்ற முழுமனதாக ஒப்புதல் வழங்குவதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று அரசு ஆவணங்கள் முதல் அனைத்திலும், கேரளா எனும் பெயர் கேரளம் என மாற்றப்படும்.

இந்த ஆண்டு கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அமைச்சரவை பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நீதித்துறையில் ஊழல் : NCERT 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வெடித்த சர்ச்சை!