India

அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!

பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தாலே, அவர்களை பதவி நீக்கம் செய்யும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின் கீழும் கைதுசெய்யப்பட்டு, 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31ஆவது நாளில் அவர்களை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில், ஜனநாயக விரோதமான இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து, இந்த மசோதா நாடாளுமன்ற ஆய்வு குழுவுக்கு அனுப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற குழுவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த விவகாரத்தில் அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளும் ஒன்றாக செயல்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதனால் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா மீதான ஆய்வு குழு அமைக்கும் திட்டம் தடைப்பட்டுள்ளது.

Also Read: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!