India

பிறந்தநாள் கொண்டாட்டம் : ஆசையாய் Cake சாப்பிட்ட சிறுமி... சட்டென்று நேர்ந்த சோகம் - பஞ்சாபில் அதிர்ச்சி!

பொதுவாக பலரது வீடுகளிலும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். அப்படி ஒரு சூழலில் தான் சிறுமி ஒருவரது பிறந்தநாளை, அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஆனால் கேக்கை வெட்டி, மகிழ்ச்சியாக தனது குடும்பத்தினருக்கு ஊட்டிய சிறுமி, திடீரென்று உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா என்ற பகுதியை சேர்ந்தவர் மான்வி (10 வயது). இவர் கடந்த மார்ச் 24-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது இவரது குடும்பத்தினர் 'Cake Kanha' என்ற கடையில் ஆன்லைனில் கேக் வாங்கியுள்ளனர். தொடர்ந்து சிறுமியும் அந்த கேக்கை வெட்டி, தனது குடும்பத்தினருக்கு ஊட்டி மகிழ்ந்துள்ளார்.

இந்த சூழலில் சிறுமி கேக்கை சாப்பிட்டு சில மணி நேரத்திற்கு பிறகு தனது படுக்கையில் வாந்தி எடுத்துள்ளார். மேலும் அவருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு இப்படி ஆகவே, பதறிப்போன பெற்றோர், உடனே அவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அங்கே அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து 5 நாட்களுக்கு பிறகே போலீசார் FIR பதிவு செய்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். சிறுமி இறந்த விவகாரம் உள்ளூர் மீடியாக்களுக்கு தெரிந்த பிறகு கடந்த சனிக்கிழமைதான் இந்த விவகாரம் பெரிய அளவு வெளியே தெரிந்தது. சிறுமி ஆசையாய் மகிழ்ச்சியாக தனது பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தலைமறைவாக இருக்கும் அந்த கேக் கடை உரிமையாளர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுமி மான்வியுடன் கேக்கை சாப்பிட்ட குடும்பத்தில் உள்ள மற்ற 5 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 80 வயது சொந்த பாட்டியை வன்கொடுமை செய்த 22 வயது பேரன்... உ.பி அதிர்ச்சியின் பின்னணி என்ன?