India
”கடுமையான சட்டத்தால் லாரி ஓட்டுநர்களின் முதுகெலும்பை உடைக்கும் பா.ஜ.க அரசு” : ராகுல் காந்தி ஆவேசம்!
அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் போது வண்ண புகைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஒன்றிய அரசு விளக்கம் எதுவும் கொடுக்காமல் கேள்வி கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவையில் இருந்து இடைநீக்கம் செய்தது.
இப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றி விட்டுப் பல புதிய மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. அதில் ஒன்றுதான் மூன்று புதிய கிரிமினல் சட்டங்களாகும். பின்னர் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த நான்கு நாட்களிலேயே இந்த கிரிமினல் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகன ஓட்டிகள் தப்பிச் சென்றுவிட்டால் அவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.7 லட்சம் அவரை அபராதமும் விதிக்கப்படும் என இச்சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சரக்கு லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வட மாநிலம் முழுவதும் இப்போராட்டம் பரவியுள்ளது. இதனால் எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் குவிந்து வருவதால் வடமாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர்கள் முதுகெலும்பை ஒன்றிய பா.ஜ.க அரசு உடைக்கிறது என ராகுல் காந்தி எம்.பி கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவில்,"குறைந்த வருமானம் கொண்ட கடின உழைப்பாளிகளின் வர்க்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களை புதிய கிரிமினல் சட்டங்கள் கடுமையாகப் பாதிக்கும். இந்த சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதுடன் ஊழலுக்கும் வழிவகுக்கும். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான லாரி ஓட்டுநர்களுக்கு எதிரான சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அவர்களை அழைத்து ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!