India

2 ஆண்டில் கடன் வலையில் சிக்கப்போகும் இந்தியா: IMF அறிக்கையை சுட்டிக்காட்டி ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆண்டு தோறும் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு வருகிறது. இதைச் சரியாகக் கணிக்காமல் மேலும் மேலும் ஒன்றிய அரசு தவறான வழிகளிலேயே சென்று வருகிறது.

குறிப்பான பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற அதிரடி நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரமே வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து. இதற்கிடையில் கொரோனா தொற்று வேறு. இதனால் இளைஞர்கள் பலர் வேலையை இழக்க நேரிட்டது. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

அதேபோல் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. இந்நிலையில் 2027க்குள் இந்திய அரசின் கடன் சுமை 100% அதிகரிக்கும் என சர்வதேச நாணயம் நிதியம் (IMF) சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் காநிலை மாற்றத்தைக் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி தேவைப்படும் என்பதால், நீண்டகால கடன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்த சர்வதேச நாணய நிதியம், ஒன்றிய நிதி அமைச்சகம் புதிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் எனவும், தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ஆனால் IMFன் அறிக்கைக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.“இந்தியாவின் கடன் குறித்துப் பேசியிருக்கும் ஐஎம்எப், சில விஷயங்களை பாசிட்டிவாக கூறியிருப் பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் மேம்பட்டால், கடன் 70 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என ஐஎம்எஃப் குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல உள்நாட்டுக் கடன் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதனால் பெரும் ஆபத்து ஏற்படாது. 2020-21 நிதி யாண்டில் 88 சதவிகிதமாக இருந்த கடன், 2022-23 நிதியாண்டில் 81 சத விகிதமாகக் குறைந்துள்ளது என் பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கடன் குறித்த அச்சம் தேவையற்றது” என்று கூறியிருந்தது.

ஆனால், உண்மையில் இந்திய மக்களின் வாங்கும் திறன் கடந்த சில ஆண்டுகளாக சரிந்துள்ளது. அல்லது, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகரிக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் தங்கம், வைரம், நிலங்கள், விலையுயர்ந்த கார்கள், கட்டடங்கள், ஆடம்பர சொகுசு வீடுகள் என அனைத்து சொத்துக்களிலும் 40 சதவிகிதம், நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 1 சதவிகிதம் மட்டுமே பெரும் பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கிறது.

இவர்கள்தான் நாட்டின் பெரும் பணக்காரர்கள். மறு புறமோ, நாட்டு மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள- அதாவது 50 சதவிகித மக்களிடம் வெறும் 3 சதவிகித செல்வம்தான் இருக்கிறது. எனவே, இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்று கூறித்தான் அரசுகள் தொடர்ச்சியாகக் கடனை வாங்கி குவித்து வருகின்றன. இது ஒரு கட்டத்தில் அபாய கட்டத்தை எட்டும்போது, இந்தியாவும், இலங்கையை போல பொருளாதார பிரச்சனையில் சிக்கும் என்பதைத்தான் ஐஎம்எப் சூசகமாக எச்சரித்திருக்கிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: 3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு 4 நாட்களில் ஒப்புதல் : இதற்குதான் 146 எதிர்க்கட்சி MPக்கள் இடை நீக்கமா?