India

விபத்துக்குள்ளான திரைப்படத் தயாரிப்பாளர்: செல்பி எடுத்து, உடமையை திருடிய மக்கள்- பரிதாபமாக பலியான சோகம்!

டெல்லி குருகிராமை அடுத்துள்ள கால்காஜி என்ற பகுதியில் வசித்து வருபவர் பியூஷ் பால் (30). இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருந்து வந்தார். இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் தனது பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் பியூஸ் பால், ஹௌஸ் காஸ் என்ற இடத்தில் சென்றபோது திடீரென மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறிய இவர், அருகில் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்து படு காயத்துக்கு உள்ளானார். தலையில், முகத்தில் என படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த இவரை அருகில் இருந்த பலரும் வீடியோ புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அதோடு அவரது அருகில் சென்று உதவி புரிவது போல், அவரது லேப்டாப், மொபைல், பர்ஸ் உள்ளிட்ட உடமைகளை திருடி சென்று விட்டனர். இரவு 9.45-க்கு விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த இவர், அருகில் இருந்த மற்றொரு நபர் கடினப்பட்டு ரிக்ஷாவில் பியூஷை மீட்டு சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கிளினிகே ஒன்றுக்கு கூட்டி சென்றார். அரை மணி நேரம் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி உயிரிழந்தார்.

ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சூழ்நிலையில், அருகில் இருப்பவர்கள் வேடிக்கை பார்க்கவும், செல்பி எடுக்கவும், வீடியோ எடுக்கவும், திருடவும் போன்ற செயலில் ஈடுபட்டதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. 'மனிதம் எங்கே?' என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விபத்து நடந்த உடனையே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் பொதுமக்கள் சிலரின் அலட்சியத்தினாலும், மனிதநேயமின்மை காரணமாகவும் ஒரு வாலிபரின் உயிர் பரிதாபமாக போயுள்ளது.

தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 96,917 இந்தியர்கள் : குஜராத் நபர்கள்தான் அதிகம் - வெளிவந்த அறிக்கை !