India

பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை: சாமியார் அதிரடி கைது.. உ.பி-யில் அதிர்ச்சி !

உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை சாமியார் என்று சொல்லிக்கொண்டு 52 வயதுடைய மோதிலால் என்ற நபர் வலம்வந்துள்ளார். இவரிடம் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடைய 18 வயது மகளை அழைத்து வந்துள்ளனர்.

வந்தவர்கள் தங்கள் மகளுக்கு பிரச்சனை இருப்பதாகவும் அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாகவும், பேயை விரட்ட பூஜைக்காக ரூ.4 ஆயிரம் தரவேண்டும் என்றும் அந்த சாமியார் கூறியுள்ளார்.

அதனைத் நம்பிய அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாரும், சாமியார் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். உடனே ஒதுக்குபுறமாக இருக்கும் கோவிலுக்கு இளம்பெண்ணை தனியாக கூட்டிசென்றுதான் பேய் ஓட்ட முடியும் என்று கூறிய சாமியார், அந்த பெண்ணை மட்டும் அழைத்துக்கொண்டு அந்த கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றவர் பேய் ஓட்டுவதாக கூறி அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பிய இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் அந்த சாமியாரை கைது செய்தனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை: குன்றத்தூரில் மீட்ட போலீசார்.. 2 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை !