India

சாலையில் இருந்தவரை காரை ஏற்றி கொடூரமாக கொலை செய்த பாஜக பிரமுகர்: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருக்கும் கவிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.டி.சி ராஜ்நகர் பாலம் அருகே உள்ள சாலை ஒன்றில் நபர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். ஆள் நடமாட்டம், மற்ற வாகனங்கள் எதுவும் இல்லாத அந்த நேரத்தில், அந்த நபர் சாலையின் நடுவே இருக்கிறார். அப்போது கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த காரின் முன் பக்கத்தில் பாஜக கொடி இருந்துள்ளது. மேலும் அந்த காரின் பின்னே இந்தியில் எழுதப்பட்ட பாஜகவின் வாசகம் பொருந்திய ஸ்டிக்கர் ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் வேகமாக வந்த அந்த கார், சாலையில் அமர்ந்திருந்த அந்த நபர் மீது ஏறி, அவரை சிறிது தூரம் இழுத்து சென்றது. இந்த கோர விபத்தில் சாலையில் இருந்த அந்த நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இந்த கோர சம்பவத்தை அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் தங்கள் மொபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை தொடர்ந்து அந்த கார் யாருடையது என்று போலிஸார் விசாரித்தனர். பின்னர் அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சவுரப் சர்மாவை போலிஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரிக்கையில் அவர் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள ஷிகர்பூரின் பாஜக எம்.எல்.ஏ அனில் சர்மாவின் உறவினர் என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோ நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் நடந்தது. சம்பவம் குறித்து போலிஸார் தற்போது வரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் சவுரப் சர்மாவிடம் இருந்து காரை பறிமுதல் செய்ததோடு அவரை போலிஸார் கைதும் செய்துள்ளது. இருப்பினும் சாலையில் அமர்ந்திருந்த அந்த நபர் குறித்த விவரம் இன்னமும் தெரியவரவில்லை.

அந்த நபர் யார், எதற்கு சாலையின் நடுவே இருந்தார், மாற்றுத்திறனாளி என்பதால் சாலையை கடக்க முயன்றாரா அல்லது போதையில் அமர்ந்திருந்தாரா அல்லது மன நல பாதிக்கப்பட்ட நபரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “டூப்ளிகேட் தலைவர்கள்.. MP, MLA-க்கள் இல்லாத கட்சிகள்” : மோடியின் NDA கூட்டணியின் லட்சணம் இதுதான்!