India

“நீ கருப்பா இருக்க..” - அடித்து கொடுமை செய்த கணவர்.. 3 பிள்ளைகளை விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு !

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அமைந்துள்ளது அரூர் என்றார் பகுதி. இங்கு K S உண்ணி என்ற 40 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நீதுமோல் என்ற 33 வயது பெண்ணுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதிக்கு தற்போது 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார் உண்ணி.

மேலும் அவரை அழகாக இல்லை என்றும், அவர் கருப்பாக இருப்பதாகவும் கூறி அவமானப்படுத்தி வந்துள்ளார் உண்ணி. அதுமட்டுமின்றி அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனால் மனமுடைந்து போகும் நீதுவும், தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வார். பின்னர் சமாதானமாகி மீண்டும் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதுபோன்றே தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. இருப்பினும் தனது பிள்ளைகளுக்காக பொறுத்துபோய் வாழ்ந்து வந்துள்ளார் நீது. ஆனால் அண்மைக்காலமாக உண்ணியின் கொடுமை தொடர்ந்து அதிகரித்தே காணப்பட்டுள்ளது. அதோடு சண்டை காரணமாக நீதுவுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் உண்ணி தனது பிள்ளைகளையும் சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த நீது, நேற்றைய முன்தினம் தனது படுக்கையறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து உறவினர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் நீதுவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

மேலும் நீதுவின் குடும்பத்தினர், அவரது சாவுக்கு உண்ணி தான் காரணம் என போலீசில் புகார் கொடுக்கவே, அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கருப்பாக இருப்பதாக கூறி கொடுமை செய்து வந்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கதறி துடித்து நாடகமாடிய மனைவி.. விசாரணையில் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்தது அம்பலம்.. பின்னணி என்ன ?