India

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட தாம்பூல பையில் மதுபாட்டில்.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையைச் சேர்ந்த மணமகனுக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து பெண் வீட்டார் சார்பில் புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் திருமண வரவேற்புக்கு வந்தவர்களுக்குத் தாம்பூல பை வழங்கப்பட்டது.

இந்த பையில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன், சிறிய மதுபாட்டில் ஒன்றும் இருந்துள்ளது. இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் மது பாட்டில் கொடுத்தது கலாச்சார சீர்கேடு என்றும், சம்மந்தப்பட்டவர்கள் மீது போலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து திருமண மண்டபத்தில் தாம்பூல பையுடன் மது பாட்டில் வழங்கிய மணப்பெண்ணின் தாய் மாமன் ராஜ்குமாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Also Read: 39 கிரிமினல் வழக்கு, மகன் தற்கொலைக்கு காரணம்- பாஜக பொத்தி பாதுகாக்கும் பிரிஜ் பூஷனின் அதிர்ச்சி பின்னணி ?