India

ஹிஜாப் பிரச்சனை: “600க்கு 593 மதிப்பெண்.. மாநிலத்தில் முதலிடம்”: சங்கிகளுக்கு தரமான பதிலடி கொடுத்த மாணவி!

கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-சின் இந்துத்வா அமைப்புகளான ஏ.பி.வி.பி, வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் உதவியுடன், இந்துத்துவா மூளைச் சலவையில் சிக்கியுள்ள மாணவர்களை வைத்து கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதியில் உடுப்பியில் உள்ள பியு கல்வி  நிலையத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என இஸ்லாமிய மாணவிகளை மிரட்டினர்.

மேலும் இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்பு உள்ள மாணவர்கள் “காவி” உடையுடன் வந்து கல்வி நிலையங்களில் கலவரச் சூழலை ஏற்படுத்தினர். உடுப்பி கல்லூரியில் தபசும் ஷேக் என்ற மாணவி,  ஹிஜாப் அணிந்து வந்த போது, மதவெறி பிடித்த கயவர்கள் அப்பெண்ணைச் சூழ்ந்து கொண்டு ரகளை செய்தனர். அப்போது, ஒற்றை ஆளாக அவர்களை எதிர்த்து நின்று, ‘அல்லா ஹு அக்பர்’ என்று உரத்த குரலில் கோஷமிட்டு, ஆவேசப் போராட்டத்தை நடத்தினார்  தபசும் ஷேக்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடுப்பியில் இருந்து படிப்படியாக மாநிலம் முழுவதும் ஹிஜாப் தடை எதிர்ப்பு போராட்டம் பரவ, கல்வி நிலையங்களில் ‘மத அடை யாளமான’ ஹிஜாப்பை அனுமதிக்க முடியாது என கர்நாடகா பா.ஜ.க அரசு பிடிவாதமாக உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி முஸ்லிம் மாணவிகள் சிலர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசுப் பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்றும் மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்றும் கூறி மாணவிகளின் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பி.யு.சி 2-ஆம் ஆண்டு தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் 21 அன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவில் மாணவி தபசும் ஷேக், கலைப் பிரிவில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக தி டெலிகிராப் செய்தி நிறுவனத்திற்கு தபசும் ஷேக் அளித்த பேட்டியில், “ஹிஜாப் தடை குறித்த அறிவிப்பு வந்ததும் இந்த விவகாரத்தை பெற்றோர் என்னிடம் விளக்கிக் கூறினர். எனது மதம் மற்றும் கல்வி ஆகிய இரண்டில் ஒன்றை  நான் தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருந்தேன்.

ஹிஜாப் அணிவது எனது அடையாளம் மற்றும் மதத்தின் ஒருபகுதி. அப்படியிருக்கும்போது இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுவது, அதுவும் மதச்சார்பற்ற நாட்டில் நியாயமற்றதாக எனக்கு தோன்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினேன். இரண்டு வாரங்களாக கல்லூரிக்குச் செல்லவில்லை. தனது பி.யு. கல்லூரியில் படித்த  பல மாணவிகள் ஹிஜாப் விவகாரத்தால், கல்லூரியை விட்டு வெளியேறி, திறந்தநிலை கல்லூரிகளில் சேர ஆரம்பித்தனர்.

ஆனால், நான் ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு செல்ல முடியாது என தந்தையிடம் கூறினேன். அதை கேட்ட எனது தந்தை என்னை  அருகில் அழைத்து, ‘கல்விதான் சரியான பாதை. நீ சமூகத்தில் ஒரு நிலையை அடையவும், உன்னை போல மற்றவர்களை உயர்த்தவும் கல்வி மட்டுமே ஒரே ஆயுதம். இதுபோன்ற அநீதிகள் மீண்டும் சமூகத்தில் நிகழாமல் தடுக்க நீ கண்டிப்பாக படிக்க வேண்டும். உன் வார்த்தையை பிறர் கேட்க,  நீ அதிகாரத்தில் இருக்க வேண்டும்” எனக்  கூறினார்.

அவரது அறிவுரைக்கு அடுத்த நாளே முதன்முறையாக ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு சென்றேன். மனவேதனையுடன் இருப்பதை அறிந்த எனது நண்பர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். முதல் ஆண்டு சீராகவே சென்றது. ஆனால் ஆண்டின் இறுதியில் நிறைய சிரமங்களும், நிச்சயமற்ற தன்மைகளும் வந்து போயின. இருப்பினும் பெற்றோர் ஆதரவுடன் படிப்பில் கவனம் செலுத்தினேன்” எனக் கூறினார்.

மேலும், பியு கல்லூரியில் படித்த மாணவி தபசும்  ஷேக்குக்கு, பெங்களூரு ஆர்.வி. பல் கலைக்கழகத்தில் சைக்காலஜி துறையில் படிக்க அட்மிஷன் கிடைத்துள்ளது. இது குறித்து தபசும் ஷேக் கூறுகையில், “உளவியல் படிப்பை படித்து மனநலம் தொடர்பான பணியை செய்ய ஆர்வமாக உள்ளேன். இளங்கலை முடித்து முதுகலைப் பட்டம் பெற்று, மருத்துவ உளவியலில் (clinical psychology) நிபுணத்துவம் பெற விரும்புவதாக” தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்விலும் ஹிஜாப் பிரச்சனை மத்தியிலும் கல்வியில் கவனம் எழுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாணவி இல்ஹாம் 600க்கும் 597 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பாரம்பரிய கலைகள் & உணவு திருவிழா..” : தூத்துக்குடியில் களைகட்டிய நெய்தல் விழா - வியந்து பார்த்த மக்கள்!