India

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த நபர் உயிருடன் வருகை.. 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த சம்பவத்தின் பின்னணி என்ன ?

கடந்த 2019-ம் ஆண்டு உருவான மிகப்பெரிய அலைதான் கொரோனா. இதன் தாக்கம் 2020-ம் ஆண்டு உலகையே உலுக்கியது. சீனாவில் தொடங்கிய இந்த நோய் தொற்றானது, உலகம் முழுக்க பரவியது. ஒவ்வொரு நாடுகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டது. உலகம் முழுக்க லாக் டவுன், pandemic என பலவகையான விஷயங்கள் கண்டது.

கொரோனா தொற்று காரணமாக நாளொன்றுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் இந்த தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்தே காணப்பட்டது. சில நாட்களுக்கு பின்னர் இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் ஒவ்வொரு டோஸாக செலுத்திக்கொண்டனர். உலகளவில் இது நடைபெற்றது.

கொரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அது வெற்றிபெற்று பல இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. அந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னரே கொரோனா தொற்று உலக அளவில் குறையத்தொடங்கியது. எனினும் கொரோனா தொற்று திடீரென அதிகரித்து அவ்வப்போது பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.

தற்போதும் நாடு முழுவதும் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், தற்போது 2 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் தர் பகுதியை அடுத்துள்ள கரோட்கலன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கமலேஷ் (40). இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-வது அலையின் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போது அருகில் இருந்த மருத்துவமனையில் போதிய இடம் இல்லாத காரணத்தினால் இவர் குஜராத்தில் உள்ள பரோடா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கே இவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு கழித்து இறந்துவிட்டதாக குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கமலேஷின் உடலை கொடுக்க மருத்துவர்களும் மறுத்து விட்டனர். இதனால் அவரது உடல் இல்லாமலே இறுதி சடங்கு நடத்தி கமேலேஷ் இல்லாமல் அவரது குடும்பம் 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை திடீரென இரவு நேரத்தில் கமலேஷ் தனது உறவினர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். இவரை கண்டதும் அவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனர். பின்னர் அவரிடம் விசாரித்தனர். அப்போது "நான் கொரோனாவால் குணமான பிறகு வீட்டுக்கு வர முயன்றேன். ஆனால் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு கும்பல் என்னை கடத்தினர். இவ்வளவு நாட்களாக அவர்கள் போதையில் என்னை வைத்திருந்தனர்.

தற்போது அவர்கள் ஒரு பேருந்து நிலையம் அருகே சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கே இருக்கும் பேருந்தில் ஏறி இங்கே வந்தேன்" என்றார். தற்போதும் அவர் அரை போதை மயக்கத்திலே இருந்ததால் மேற்கொண்டு அவரிடம் உறவினர்கள் விசாரிக்கவில்லை. இருப்பினும் கமலேஷ் வருகையினால் அவரது குடும்பம் பெரும் ஆனந்தத்தில் உள்ளனர்.

குஜராத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர், தற்போது 2 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read: “ஏய் எப்புட்றா..” - சதுர வடிவு டயர் கொண்ட சைக்கிள்.. ரோட்டை தேய்த்து ஓட்டுவது போல் புதிய கண்டுபிடிப்பு !