India

காரில் இருந்து இறங்கிய உதவி ஆட்சியரை கடித்துக் குதறிய தெருநாய்கள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை உதவி ஆட்சியராக இருப்பவர் சீனிவாச ரெட்டி. இவர் வழக்கம்போல் அலுவலகத்திற்கு காரில் சென்றுள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கி தனது அறைக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த சில தெருநாய்கள் அவரை சுற்றிவளைத்துக் கொண்டு கடித்துள்ளது. இதில் உதவி ஆட்சியர் சீனவாச ரெட்டிக்குக் இரண்டு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பிறகு அங்கிருந்த உதவியாளர்கள் தெருநாய்களை விரட்டி காயத்துடன் இருந்த உதவி ஆட்சியரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அதேஇடத்தில் நாய் கடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான். அதேபோல் தெருநாய் கடித்ததில் ஆட்சியரின் வளர்ப்பு நாயும் படுகாயம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் சில மாதங்களாகவே தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட சாலையில் நடந்து சென்று தெருநாய்கள் கடித்ததில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கேபிள் ஒயரில் ஈரத் துணிகளை காயவைத்த இளம்பெண்.. மின்சாரம் தாக்கி கேபிள் ஆபரேட்டர் மனைவிக்கு நேர்ந்த சோகம்!