India

ஆந்திரா: தம்பியின் காதலுக்கு சமரசம் பேச சென்ற அண்ணன்.. காரோடு எரித்து காதலியின் கணவர் வெறிச்செயல் !

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை அடுத்துள்ளது பிராமனபள்ளி. இங்கு நாகராஜூ என்பவர் வசித்து வருகிறார். 36 வயதுடைய இவர் அங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்தே பணிபுரிந்து (ஒர்க் பிரம் ஹோம்) வரும் இவர் தனது தம்பி புருஷோத்தமன் என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில் புருஷோத்தமன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு திருமணமும் ஆகவில்லை என்பதால் வெட்டியாக ஊர் சுற்றி தனது பொழுதை கழித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் இவருக்கும், அதே ஊரை சென்ற ரிபிஜெயா என்பவரது மனைவிக்கும் அறிமுகம் கிடைத்து பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாகராஜூ

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, அவர்களுக்குள் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்தது. இதனால் கணவர் இல்லாத நேரம் பார்த்து இருவரும் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்த விவகாரம் குறித்து கணவர் ரிபிக்கு சந்தேகம் ஏற்படவே, இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால் கணவர் மற்றும் காதலனுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. அதோடு இந்த சம்பவம் குறித்து அண்ணன் நாகராஜூவுக்கும் தெரிய வரவே அவரும் தனது தம்பியை கண்டித்துள்ளார். மேலும் அவரை வேலை காரணமாக பெங்களூரு அனுப்பி வைத்துள்ளார். தம்பி சென்ற பிறகு அவரது காதலியின் கணவரை அழைத்து சமாதானம் பேச முயன்றுள்ளார் நாகராஜூ.

அதன்படி சம்பவத்தன்று கோபி என்பவர் மூலம் ரிபிஜெயா மற்றும் அவரது நண்பரை சமாதானம் பேசுவதற்காக காரில் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே இரு தரப்பினரும் பேசிக்கொண்டிருக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரிபி மற்றும் அவரது நண்பர் நாகராஜூவை அடித்து, அவரது காரில் வைத்து உயிரோடு எரித்து கொலை செய்துவிட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைக்க அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாகராஜூவின் மனைவியிடம் விசாரிக்கையில் நடந்தவற்றை கூறினார். மேலும் இறுதியாக தனது கணவர் தன்னிடம் பேசும்போது, "நான் இடத்திற்கு வந்துவிட்டேன்.. அவர்களிடம் சமாதானம் பேசிவிட்டு அழைக்கிறேன்" என்று கூறியதாகவும், அதன்பிறகு அவரது போன் ரீச் ஆகவில்லை என்றும் கதறி அழுதுகொண்டே கூறினார்.

இதையடுத்து இதுகுறித்து வழக்குபதிவு செய்த அதிகாரிகள் தலைமறைவாக இருக்கும் ரிபிஜெயா, கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். தம்பியின் காதலுக்கு சமாதானம் பேச சென்ற அண்ணனை காதலியின் கணவர் காரில் வைத்து உயிரோடு எரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஓடும் ரயிலில் பயங்கரம்.. பயணிகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்.. குழந்தை உட்பட 3 பேர் பலி.. கேரளாவில் சோகம்!