India
பிரசவ வலியால் துடிதுடித்த நிறைமாத கர்ப்பிணி.. திடீரென பற்றி எரிந்த கார்.. கேரள தம்பதிக்கு நேர்ந்த சோகம் !
கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஜித் (32). இவருக்கும் ரீஷா (26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மத்துடனும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ரீஷா கர்பமுற்றார்.
இந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரீஷாவுக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதன்படி ரீஷா அவரது கணவர் மற்றும் அவரது உறவினர் பெண்கள் 3 பேர், ஒரு குழந்தை என அனைவரும் காரில் சென்றனர்.
போகும் வழியிலேயே வலியால் துடிதுடித்து கொண்டிருந்தார். அப்போது கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு சுமார் 100 மீட்டர் தொலைவில் திடீரென காரின் முன் பகுதி தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் பிரஜித் காரை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனால் பதறிப்போன குடும்பம் கத்தி கூச்சலிட்டனர்.
அதோடு காரின் பின்பகுதியில் இருந்த குடும்பத்தினர் (3 பெண்கள், 1குழந்தை) கீழே இறங்கினர். ஆனால் தீ பற்றி எரிந்ததில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பிர்ஜித் மற்றும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரீஷாவால் காரின் கதவை திறந்து தப்பிக்க இயலவில்லை. இதில் அலறி துடித்து சம்பவ இடத்திலேயே இருவரின் உடலும் கருக தொடங்கியது.
இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்க முனைப்பு காட்டினர். ஆனால் காரின் முன்புறம் உள்ள பெட்ரோல் டேங்க் வெடித்து விடுமோ என்ற பயத்தில் அவர்கள் அருகே செல்லவில்லை. இதனால் அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், காரில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை சிறிது நேர முயற்சிக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து காரின் முன்பகுதியில் இருந்த இருவரையும் மீட்க முயன்றனர்.
ஆனால் இருவரும் உடல் கருகி சடலமாக மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட கண்ணூர் நகர போலிஸ் கமிஷனர் அஜித் குமார் கூறுகையில், "காரின் பின் இருக்கையில் இருந்தவர்களுக்கு காயம் எதுவும் இல்லை. அவர்கள் மருத்துவமனையில் உள்ளனர், அவர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். தீப்பிடித்த காரின் முன்பக்க கதவை திறக்க முடியாததால், ரீஷாவும், பிரஜித்தும் உள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!