India

ஒடிசாவில் அதிர்வலை : அமைச்சர் மீது திடீர் துப்பாக்கி சூடு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்..

ஒடிசா மாநிலத்தில் தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அனைத்து மாநிலங்களில் நிலவும் அதே அரசியல் மோதல்கள் அடிக்கடி காணப்படும். இங்கு சுகாதாரத் துறை அமைச்சர் இருப்பவர் நபா தாஸ்.

இந்த நிலையில் நபா தாஸ் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இன்று ஒடிசாவின் ஜர்சுகுடா பகுதியிலும் பிரஜாராஜ் நகரில் பொது விழா ஒன்று நடைபெற்றது. இதை சிறப்பு விருந்தினாக அமைச்சர் தாஸ் கலந்துகொண்டார். அப்போது அவரது பாதுகாப்புக்கு அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவருக்கு அங்கிருந்த பொதுமக்கள் வரவேற்பும் கொடுத்தனர்.

தொடர்ந்து அவர் உள்ளே சென்று கொண்டிருந்தபோது அவர் மீது மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அவரது மார்பு பகுதியில் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அமைச்சரை அருகிலிருந்த அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சக அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர்தான் அமைச்சரை சுட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறை அதிகாரிகள் உடனே அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிகாரியை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கவலைக்கிடமாக இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார்.

தற்போது காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு காவல் உதவி ஆய்வாளர் அமைச்சரை சுட்டுள்ள சம்பவம் தற்போது ஒடிசாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வெடித்த BBC ஆவணப்பட சர்ச்சை.. பகிரங்க மன்னிப்பு கேட்ட YOUTUBER மதன் கெளரி.. பின்னணி என்ன ?