India

'இனி திரைப்படங்கள் பற்றி பேசக்கூடாது'.. பா.ஜ.க தலைவர்களை எச்சரித்த பிரதமர் மோடி: என்ன காரணம்?

டெல்லியில் ஜனவரி 16,17 ஆகிய இரண்டு நாட்கள் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், திரைப்படங்கள் குறித்தும், தனி நபர்கள் குறித்தும் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் தேவையற்ற கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என கடுமையாகக் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த எச்சரிக்கைக்கு, அண்மையில் ஷாருக்கான் நடித்துள்ள 'பதான்' படத்திற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து பகிரங்க மிரட்டல் விடுத்தனர் என்பதே காரணம்.

பிரபல நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள 'பதான்' படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியானது. இதில் நடிகை தீபிகா படுகோனே காவி உடை அணிந்திருப்பார். இதற்குத்தான் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

மேலும், 'இந்து உணர்வுகளைப் புண்படுத்தப்பட்டுள்ளது' என கூறி பகிரங்கமாகவே நடிகர் ஷாருக்கானுக்கு மிரட்டல் விடுத்தனர். இந்த படத்தை அனைவரும் புறக்கணிக்கவேண்டும் என கோரி சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி திரைப்படங்கள் குறித்து பா.ஜ.க-வினர் தேவையற்ற கருத்துகள் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிஃஎப் பாஸ்புக் சேவை தொடர்ந்து முடக்கம் - சிக்கி தவிக்கும் பயனாளிகள் !