India

மகளிர் இடஒதுக்கீடு: 9 ஆண்டுகள் ஆகியும் தேர்தல் வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை - திமுக MP ஆவேசம்!

மக்களவையில் இன்று தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நேரமில்லா நேரத்தின்போது, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு பற்றி பேசினார்.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், “மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கொண்டு வருவதில் இந்த அரசின் அலட்சியமான, அக்கறையற்ற அணுகுமுறையால் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் ஏற்பட்டு உள்ளது. 

File image

இந்த அரசாங்கம் தமது தேர்தல் வாக்குறுதியில் இந்த வாக்குறுதியை அளித்து, அதனை நிறைவேற்றுவதாக உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகியும், இன்னும் மசோதாவை நிறைவேற்றவில்லை.  

அப்படியென்றால் அந்த தேர்தல் வாக்குறுதிகள் கேலிக்கூத்து அல்லது ஏமாற்று வேலை என்றாகி விட்டது.  வாக்குறுதி கொடுத்தால், அது நிறைவேற்றப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இந்த அரசாங்கம் பாசாங்கு செய்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் உன்னத நோக்கங்கள் பற்றிய பகிரங்க அறிக்கைகள், செயலில் பிரதிபலிக்கவில்லை. 

17-வது மக்களவையில் பெண்களின் இருப்பு 15 சதவீதம் கூட இல்லை, மாநில சட்டப்பேரவைகளிலும் பாலின ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ளது. நமது அரசியலமைப்பின் 4-வது பிரிவு அனைத்து இந்திய பெண்களுக்கும் சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை உறுதி செய்கிறது.

பெண்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த உரிமை உண்டு. எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, இனியும் காலம் தாழ்த்தாமல், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "இட ஒதுக்கீடு இருந்தால் தான் இந்திய அணி தேறும்".. கன்னட நடிகரின் கோரிக்கையால் பரபரப்பு!