India

டெல்லியை தொடர்ந்து ஆந்திரா.. ஒரு வருடமாக ட்ரம்மில் கிடந்த பெண்ணின் உடல் பாகம்.. வாடகை வீட்டில் அதிர்ச்சி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் லிவ்-இன்னில் இருந்து வந்த ஷரதா என்ற இளம்பெண்ணை அவரது காதலனே 35 துண்டுகளாக வெட்டி தூக்கியெறிந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை 2 துண்டுகளாக கணவரே வெட்டியெறிந்துள்ள சம்பவம் அறங்கேறியது.

மேலும் கடந்த 8 நாட்களுக்கு முன்பு இதே டெல்லியில் கணவர் மீது சந்தேகம் இருந்ததால் அவரது இரண்டாவது மனைவி, தனது மகனுடன் சேர்ந்து அவரை கொன்று 22 துண்டுகளாக வெட்டி Fridge-ல் வைத்து தூக்கி வீசியுள்ளது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் இதே போல் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள நபர் ஒருவர் தனக்கு சொந்தமான ஒரு வீட்டை, தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

ஆனால் அந்த வீட்டில் குடியிருந்தவரோ கடந்த 1 ஆண்டு காலமாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் அதிரமடைந்த வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அவர்களது பொருட்களை வெளியே வீச நினைத்துள்ளார்.

அதன்படி கதவை உடைத்து உள்ளே சென்ற உரிமையாளர், அங்கிருந்த ட்ரம்மை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் இருந்துள்ளது. இதையடுத்து பயந்துபோன அவர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “விசாகப்பட்டினத்தின் மதுரவாடாவில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர், தனது வாடகைக்கு விட்டிருந்த வீட்டில் இருந்த பொருட்களை அகற்றுவதற்காக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார்.

வீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் அந்த வீட்டில் இருந்த வாடகைதாரர், தனது மனைவியின் கர்ப்பத்தை காட்டி பணம் செலுத்தாமல் வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த வீட்டுக்கு திரும்பவில்லை. ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்தும் வாடகைதாரர் பணம் செலுத்தாததால், அந்த வீட்டிலுள்ள பொருட்களை வெளியேற்ற பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் உடைமைகளை அகற்றும்போது, அங்கிருந்த டிரம் ஒன்றில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் கிடந்துள்ளது. தற்போது அந்த உடல் பாகங்கள் யாருடையது, அந்த வீட்டில் இருந்தவர் யார்?; தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து உரிமையாளர் புகாரும் அளித்துள்ளார்" என்றார்.

சுமார் ஒரு ஆண்டு காலமாக பெண்ணின் சடலத்தின் உடல் பாகங்கள் ஒரு டிரம்மில் இருந்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: பிரிட்ஜில் இருந்த 22 துண்டுகள்.. மகனோடு சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி.. டெல்லியில் மற்றொரு கொடூரம் !