India

8 லட்சத்துக்கு கூலிப்படை ஏவி மகனை கொன்ற பெற்றோர்.. கூறிய பகீர் காரணத்தால் தெலுங்கானாவில் அதிர்ச்சி !

8 லட்சத்துக்கு கூலிப்படை ஏவி பெற்ற மகனை பெற்றோரே கொலை செய்துள்ள சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் வசித்து வருபவர் க்ஷத்ரிய ராம் சிங் - ராணி பாய் தம்பதியினர். இவர்களுக்கு சாய் ராம் (வயது 26) என்ற மகன் இருக்கும் நிலையில், ராம் சிங் அரசு பள்ளி தலைமை ஆசிரியாராக பணிபுரிந்து வருகிறார்.

தனது கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்ட சாய்ராம், குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். தினமும் வீட்டிற்கு இவர் குடித்து விட்டு வருவதால், இவருக்கும் பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தங்கள் மகனை ஹைதராபாத்தில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பினர். ஆனால் அங்கும் மகன் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

எனவே மீண்டும் வீட்டிற்கு மகன் வந்துள்ளார். பின்னர் மீண்டும் குடிக்க தொடங்கியுள்ளார். வீட்டில் பணம் கேட்டும் சண்டையிட்டு வந்துள்ளார். அப்படி பெற்றோர் பணம் கொடுக்க மறுத்தால் அவர்களை வயதானவர்கள் என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் பொறுமை இழந்த பெற்றோர், குடிபோதைக்கு அடிமையான மகன் இனி தங்களுக்கு வேண்டாம் என்று எண்ணி, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி நல்கொண்டா என்ற பகுதியை சேர்ந்த கூலிப்படைக்கு 8 லட்ச ரூபாய் தருவதாக கூறி கொலை செய்ய கூறியுள்ளனர். அதற்கு முன்பணமாக 1.5 ;லட்ச ரூபாயும், மீதி கொன்ற பிறகு தருவதாகவும் பேரம் பேசியுள்ளனர்.

எனவே சம்பவத்தன்று கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், சாய் ராமிடம் நட்பாக பேசி அவரை குடிக்க கூட்டி சென்றுள்ளனர். அங்கே அவரை குடிக்க வைத்து, பின்னர் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொன்றுள்ளனர். பிறகு அவரது சடலத்தை அருகிலிருந்த ஆற்றில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். இதற்கு சாய் ராமின் தாய் மாமாவும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சில நாட்கள் கழித்து சடலம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் சுமார் 10 நாட்களாக மகன் குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. இதனால் இறந்துபோன இளைஞரின் பெற்றோர் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில், சம்பவத்தில் தொடர்புடைய தாய் மாமா, கூலி படையினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் தலைமறைவாக இருக்கும் ஒருவரை மட்டும் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவ அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தேள் கொட்டியதால் 7 முறை மாரடைப்பு.. ஷூ போடும் போது 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!