India

தனி ஆளாக குழி தோண்டி கணவர் உடலை புதைத்த மனைவி.. உதவிக்கு வராத கிராம மக்கள் ! ஒடிசாவில் அதிர்ச்சி !

ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் இருக்கும் பதனாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சா முண்டா. இவரது மனைவி பதி முண்டா. பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களான இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. மேலும் இந்த தம்பதியினர் பல ஆண்டுகளாக கிராமத்தினருடன் பெரிய அளவில் தொடர்பு இல்லாமல் தனியே வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஞ்சா முண்டாவிற்கு காய்ச்சல் வந்து உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது மனைவி அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு போதிய மருந்துக்கள் இல்லாத நிலையில், வேறொரு மருத்துவமனைக்கு அவரை மாற்றியுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்ல கூட பணமில்லாமல் அவர் மனைவி பதி முண்டா தவித்து வந்துள்ளார். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் ரூபாய் 1,500 கடன் வாங்கி கணவர் உடலை சொந்த ஊருக்கு எடுத்துவந்துள்ளார்.

பின்னர் கணவர் உடலை புதைக்க உதவும்படி கிராமக்களிடம் அவர் கேட்ட நிலையில் அவர்கள் உதவ மறுத்துள்ளனர். கூலி ஆட்களை வைத்து வேலை செய்யசொல்ல பணம் இல்லாத நிலையில் கணவர் உடலை தானே புதைக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி கணவர் உடலை மயானத்துக்கு எடுத்துச்சென்ற அவர், தனது கணவருக்காக தானே குழிதோண்டி அதில் கணவர் உடலை புதைத்துவைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் செய்திகளில் வெளியான நிலையில், பலரும் அந்த கிராமத்தினர் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர், ஒடிசா அரசு இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறது. ஆனால் பழங்குடி மக்களுக்கு போதிய படிப்பறிவு இல்லாமல் இருப்பதால் அவர்கள் இந்த உதவியை பெறுவதில்லை என கூறியுள்ளார்.

Also Read: மருத்துவமனையின் மாடியில் 200-க்கும் மேற்பட்ட அழுகிய சடலங்கள்.. வீடியோ வெளியானதையடுத்து வெடித்த சர்ச்சை !