India

காதலனை சந்திக்க சென்ற மகளை கொலைசெய்த பெற்றோர்.. தலை வேறு உடல் வேறாக வீசிய கொடூரம் - உ.பியில் அதிர்ச்சி !

உத்தரபிரதேச மாநிலம், மீரட்டிலுள்ள லிசாரி கேட் என்ற பகுதியில் சுமார் 19 வயதுடைய இளம்பெண் ஒருவரின் தலை இல்லாத உடலை கடந்த வாரம் கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பிறகு பெண்ணின் தலையை அண்மையில் கண்டெடுத்த அதிகாரிகள், அந்த பெண் யார் என்ன என்று கண்டறிந்தனர். அதில் அந்த பெண்ணின் பெயர் சானியா ரிஹான் என்றும், அவரது பெற்றோர்களே அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.

அதாவது அந்த பகுதிலுள்ள ஷாலிமார் கார்டன் என்ற இடத்தில் தனது குடும்பத்துடன் சானியா வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த வாசிம் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரத்தை தனது வீட்டில் தெரிவித்த சானியா, தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு வலியுறுத்தியும் வந்துள்ளார்.

வாசிம் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்கு சானியாவின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். அதோடு வாசிமை சந்திக்க கூடாது என்று கட்டளையும் விதித்தனர். இதனால் வேறு வழி தெரியாத சானியா, தனது பெற்றோருக்கு இரவு பாலில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து தூங்க வைத்துவிட்டு, தனது காதலன் வாசிமை இரகசியமாக சந்தித்து வந்தார்.

இந்த நிலையில், திடீரென்று சானியா மீது சந்தேகமடைந்த பெற்றோர் சம்பவத்தன்று இரவு தூக்கமாத்திரை கலந்த பாலை குடிக்கவில்லை. ஆனால் இது தெரியாத சானியா, தனது காதலனை சந்திக்க சென்றபோது பெற்றோரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் சானியாவின் பெற்றோர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டனர்.

பின்னர் அவரது சடலத்தை தலை வேறு பகுதியிலும், உடல் வேறு பகுதியிலும் போட்டு விட்டனர். காவல்துறை விசாரணையில் வெளிவந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரூ.2,500 கோடி கொடுத்தால் பா.ஜ.கவில் முதல்வர் பதவி.. கர்நாடகாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை ! பின்னணி என்ன?