India

’இத நாய் கூட சாப்பிடாது' கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட போலிஸ் மீது நடவடிக்கை : தொடரும் யோகி அரசின் அராஜகம்!

உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத்தில் காவலர்களுக்கான உணவகம் ஒன்று உள்ளது. இங்குக் காவலர்கள் தினந்தோறும் உணவு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் காவலர் உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மனோஜ் குமார் என்ற காவலர் கண்ணீருடன் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், "காவலர்கள் 12 மணி நேரம் பணிக்குப் பிறகு இந்த உணவகத்தில் சாப்பிடுகிறார்கள். களைப்பாக வரும் காவலர்களுக்குத் தரமான உணவு கொடுப்பதில்லை. வேகாத ரொட்டியும், தண்ணீர் கலந்த பருப்பும்தான் தினமும் கொடுக்கிறார்கள்.

இந்த உணவை நாய்கூட சாப்பிடாது. இந்த உணவை நாங்கள் எப்படி சாப்பிட முடியும். இதை நாங்கள் சாப்பிட்டு எப்படி எங்கள் கடமை செய்யமுடியும். இது குறித்து பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் இன்று கண்ணீருடன் போராட்டம் நடத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் வலுத்த நிலையில், வீடியோவில் பேசிய காவலதிகாரி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது புகார் தெரிவித்த காவல் அதிகாரி மனோஜ் குமார் கட்டாய நீண்ட நாள் விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனக்கு மன நிலை சரியில்லை என்று கூறி, பணி நீக்கம் செய்ய மேலதிகாரி திட்டமிட்டுள்ளதாகவும் மனோஜ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் காவல்துறைக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருவதாக பிரச்சாரம் செய்யப்படுவது பொய் என்று அம்பலப்படுத்தியுள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: 'மக்கள் தொகையை கட்டுப்படுத்த புது ஐடியா..' தம்பதிகளுக்கு ஒடிசா அரசு கொடுக்கும் Gift என்ன தெரியுமா?