India

'மக்கள் தொகையை கட்டுப்படுத்த புது ஐடியா..' தம்பதிகளுக்கு ஒடிசா அரசு கொடுக்கும் Gift என்ன தெரியுமா?

நாட்டில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த மக்கள்தொகையை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அது சரியாக வேலை செய்யவில்லை.

உலகளவில் தற்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆனால் இந்த மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விரைவில் இந்தியா சீனாவை முந்திவிடும் என்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒடிசா மாநில அரசு ஒரு புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது. அதாவது புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்கு ஒரு Gift Pack-ஐ வழங்கப்படவுள்ளது. அதில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான புத்தகம், காண்டம், கருத்தடை மாத்திரைகள், திருமணப் பதிவு சான்று உள்ளிட்டவை அடங்கும்.

மேலும் பெண்களுக்கு என்று குங்குமம், சீப்பு, கண்ணாடி, நகம் வெட்டும் கருவி, கர்ச்சீப், டவல் , வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்துகொள்ளும் சாதனம் உள்ளிட்டவை இடம்பெறும். வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த திட்டத்தின் பரிசுகளை புதுமண தம்பதிகளின் வீட்டிற்கே சென்று அரசு வழங்கவுள்ளது. இந்த திட்டம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதில் குடும்பக் கட்டுப்பாடு இயக்குநர் டாக்டர் பிஜய் பாணிகிரஹி என்பவர் கூறுகையில், "இந்த முயற்சியின் மூலம் குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடிக்க புதிய தம்பதிகள் முறையாக ஊக்குவிக்கப்படுகிறது" என்றார்.

மேலும் மாநில தேசிய சுகாதார திட்ட இயக்குநர் சாலினி பண்டிட் என்பவர் கூறுகையில், "ஒடிசாவில் குழந்தை பிறப்பு விகிதம் தேசிய அளவை ஒப்பிடுகையில் குறைவாகத்தான் இருக்கிறது. இருப்பினும் நாட்டிலேயே இந்த புது முயற்சியைத் தொடங்கும் முதல் மாநிலம் இதுதான்." என்றார்.

Also Read: "என் கணவருக்கு யாரும் செய்யவில்லை.. அதனால் நான் செய்கிறேன்.." நடிகை மீனாவின் உருக்கமான பதிவு !